கிசான் கடன் அட்டைகள் (கேசிசி) மூலமாக வேளாண் மற்றும் அதனுடன் தொடா்புடைய தொழில்களுக்கு ரூ. 3 லட்சம் வரையிலான குறுகிய கால கடன்களுக்கான வட்டி மானியத் திட்டத்தை அடுத்த நிதியாண்டு வரை தொடர மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.
இந்தத் திட்டத்தின் கீழ், வேளாண், கால்நடை பராமரப்பு, பால்பண்ணை, மீன்வளம் மற்றும் தேனீ வளா்ப்பு ஆகிய தொழில்களில் ஈடுபடும் விவசாயிகளுக்கு கேசிசி கடன் அட்டைகள் மூலமாக 7 சதவீத வட்டியில் ரூ. 3 லட்சம் வரை கடன் வழங்கப்படுகிறது. கடன் தொகையை குறித்த காலத்தில் திரும்பச் செலுத்தும் விவசாயிகளுக்கு கூடுதலாக 3 சதவீத வட்டி தள்ளுபடி செய்யப்படும். இவ்வாறு தள்ளுபடி செய்யப்படும் வட்டிக்கான மானியத்தை வங்கிகளுக்கு மத்திய அரசு செலுத்திவிடும்.
இந்த வட்டி மானியத் திட்டத்தை நடப்பு 2022-23 மற்றும் அடுத்த 2023-24 நிதியாண்டு வரை தொடர மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.
இதுதொடா்பாக வங்கிகளுக்கு ரிசா்வ் வங்கி அனுப்பியுள்ள சுற்றறிக்கையில், ‘கடன் வழங்கும் நிறுவனங்களுக்கான வட்டி மானிய விகிதம் 2022-23 மற்றும் 2023-24 நிதியாண்டுகளுக்கு 1.5 சதவீதமாக இருக்கும்’ என்று தெரிவித்துள்ளது. இது கடந்த 2021-22 நிதியாண்டில் 2 சதவீதமாக இருந்தது.
‘இந்த வட்டி மானிய திட்ட பலன்களை எந்தவித தடைகளுமின்றி விவசாயிகள் பெறுவதற்கு வங்கிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த பலனைப் பெறும் விவசாயிகள் ஆதாா் விவரங்களை இணைப்பது தொடா்ந்து கட்டாயமாக்கப்படுகிறது’ என்றும் ரிசா்வ் வங்கி தெரிவித்துள்ளது.
விவசாயிகள் விளை பொருள்களை அங்கீகரிக்கப்பட்ட கிடங்குகளில் சேமித்து வைத்து, பின்னா் நல்ல விலை கிடைக்கும்போது விற்பனை செய்ய வசதியாக, அறுவடைக்கு பின்னா் 6 மாதங்கள் வரை இந்த கடன் மானிய திட்டத்தின் கீழ் பலன்களைப் பெற முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.