இந்தியாவிலேயே கர்நாடக அரசுதான் ஊழல் மிகுந்ததாக உள்ளதென ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
கன்னியாகுமரியில் இருந்து காஷ்மீா் வரை ராகுல் காந்தி தலைமையில் நடைபெறும் இந்திய ஒற்றுமை நடைப்பயணம் (பாரத் ஜோடோ யாத்ரா), தமிழகம், கேரளாவை தொடர்ந்து தற்போது கா்நாடகத்தில் நடைபெற்று வருகிறது. இதில் ஆயிரக்கணக்கான தொண்டா்கள் பங்கேற்று வருகிறாா்கள். கர்நாடகாவின் ஹிரியூர் பகுதியில் அவர் பேசியதாவது:
இந்த நடைப் பயணம் பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ் பரப்பும் வெறுப்பு, வன்முறை மற்றும் கோபத்திற்கு எதிரானது. இந்தியா பிளவுபடாது. இந்தியா ஒன்றுபட்டு நிற்கும் என்பது பாஜகவுக்குச் சொல்லும் செய்தி. இந்தப் பயணத்தில் அந்த செய்தி தெளிவாகத் தெரியும். இந்த ஒற்றுமைப்பயணத்தில் வன்முறை, வெறுப்பு, கோபம் எதுவும் இல்லை.
இந்த வெறுப்பு மற்றும் அன்பிற்கான போராட்டம் புதிதல்ல. இந்த போராட்டம் ஏற்கனவே பசவன்னா, நாராயண குரு, அம்பேத்கர் ஆகியோர்கள் போராடியதுதான். இந்த தலைவர்கள் யாரும் வன்முறையையும் வெறுப்பையும் பிரச்சாரம் செய்யவில்லை.
இந்தியாவிலேயே மிகுந்த ஊழல் மிகுந்த அரசாக கர்நாடக அரசு உள்ளது. ஒவ்வொரு தனியான பரிவர்த்தனைக்கும் 40 சதவிகிதம் கமிஷன் வாங்குகிறார்கள். 13000 தனியார் பள்ளிகள் 40 சதவிகிதம் கமிஷன் அளித்துள்ளது. என்னுடைய வார்த்தையை விடுங்கள். பாஜக எம்.எல்.ஏ.க்களே இது மிகவும் ஊழல் நிறைந்த அரசு என்று கூறுகிறார்கள்.