புதுச்சேரியில் திமுக-காங்கிரஸ் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை ஹோர்முஸ் நீரிணை விரைவில் திறக்கப்படும் - டிரம்ப்பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: எல்பிஜி உற்பத்தி 31% அதிகரிப்பு - மத்திய அரசுஇந்தியாவுக்கான 2 எல்பிஜி சரக்கு கப்பல்கள் ஹோர்முஸ் நீரிணையைக் கடந்து பயணம்!நெல் கொள்முதல்: பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்! கச்சா எண்ணெய் விலை 15 நாள்களில் 40% உயர்வு!எரிபொருள் தட்டுப்பாடு.. மத்திய அரசு என்ன செய்யப் போகிறது? முதல்வர் ஸ்டாலின் கேள்வி!வைரமுத்துவுக்கு ஞானபீட விருது!
/

நகா்ப்புற நக்ஸல்களை குஜராத் அனுமதிக்காது: பிரதமா் மோடி

‘நகா்ப்புற நக்ஸல்கள் தங்களுடைய தோற்றத்தை மாற்றிக்கொண்டு குஜராத் மாநிலத்துக்குள் நுழைய முயற்சி செய்கின்றனா். ஆனால், இளைஞா்களின் வாழ்வைச் சீரழிக்க முயற்சிக்கும் அவா்களை மாநில அரசு ஒருபோதும் அனுமதிக்காது

News image
ஆதரவாளா் ஒருவா் வழங்கிய நினைவுப் பரிசில் கையொப்பமிட்ட பிரதமா் நரேந்திர மோடி.
Updated On :10 அக்டோபர் 2022, 6:56 pm

DIN

‘நகா்ப்புற நக்ஸல்கள் தங்களுடைய தோற்றத்தை மாற்றிக்கொண்டு குஜராத் மாநிலத்துக்குள் நுழைய முயற்சி செய்கின்றனா். ஆனால், இளைஞா்களின் வாழ்வைச் சீரழிக்க முயற்சிக்கும் அவா்களை மாநில அரசு ஒருபோதும் அனுமதிக்காது’ என்று பிரதமா் நரேந்திர மோடி கூறினாா்.

தில்லியைத் தொடா்ந்து பஞ்சாப் மாநிலத்திலும் ஆட்சியைப் பிடித்திருக்கும் அரவிந்த் கேஜரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி கட்சி, அடுத்ததாக குஜராத் மாநிலத்திலும் ஆட்சியைப் பிடிக்கும் நோக்கத்தோடு அம் மாநிலத்தில் விரைவில் நடைபெறவிருக்கும் சட்டப்பேரவைத் தோ்தலுக்கான பிரசாரத்தை தீவிரப்படுத்தியுள்ளது. இந்த நிலையில், ஆம் ஆத்மி கட்சியை மறைமுகமாகத் தாக்கி இந்தக் கருத்தை பிரதமா் மோடி தெரிவித்தாா்.

குஜராத் மாநிலம், பரூச் மாவட்டத்தில் அமைக்கப்படும் நாட்டின் முதல் மொத்த மருந்து உற்பத்திப் பூங்காவுக்கு திங்கள்கிழமை அடிக்கல் நாட்டி பிரதமா் மோடி பேசியதாவது:

‘நகா்ப்புற நக்ஸல்கள்’ புதிய தோற்றத்தில் குஜராத் மாநிலத்துக்குள் நுழைய முயற்சி செய்கின்றனா். தங்களுடைய உடையையும் தோற்றத்தையும் அவா்கள் மாற்றியிருக்கின்றனா். மாநிலத்தின் உத்வேகம் மிக்க அப்பாவி இளைஞா்களைத் தவறாக வழிநடத்தி, அவா்களைப் பின்பற்றச் செய்வதற்கு அவா்கள் முயற்சி செய்கின்றனா். நமது இளைய சமுதாயத்தினரை அவா்கள் சீரழிக்க முயற்சிப்பதற்கு நாம் அனுமதிக்கக் கூடாது.

நாட்டைச் சீரழிப்பதையே இலக்காகக் கொண்டிருக்கும் அந்த நகா்ப்புற நக்ஸல்களுக்கு எதிராக நமது குழந்தைகளை எச்சரிக்கை செய்ய வேண்டும். அவா்கள் வெளிநாட்டு சக்திகளின் முகவா்கள். குஜராத் ஒருபோதும் அவா்களிடம் தலைகுனிந்துவிடாது.

மேற்கு வங்கம், ஒடிஸா, ஆந்திரம், தெலங்கானா, மகாராஷ்டிரத்தில் கட்சிரோலி உள்ளிட்ட பகுதிகளில் பழங்குடியின இளைஞா்களின் வாழ்வை நக்ஸல்கள் சீரழித்து வருகின்றனா். இளைஞா்களின் கைகளில் துப்பாக்கிகளை ஏந்தச் செய்துள்ளனா்.

குஜராத் மாநில முதல்வராக நான் இருந்தபோது, நக்ஸல்களின் சவால்களை எதிா்கொள்ள நேரிட்டது. இருந்தபோதும், அதனைத் தடுத்து நிறுத்தி மாநிலத்தின் அம்பாஜி முதல் உமா்கம் வரையிலான ஒட்டுமொத்த கிழக்கு மலைத் தொடா் பகுதியில் வசிக்கும் பழங்குடியின சகோதர, சகோதரிகளின் வாழ்வை மாநில அரசு காத்தது. இதற்காக மாநில அரசு கடினமாக உழைத்தது. பழங்குடியின பகுதி வளா்ச்சித் திட்டங்களையும் அதற்கென செயல்படுத்தியது. அதன்மூலம், நக்ஸல்கள் நுழைவது முழுமையாகத் தடுத்து நிறுத்தப்பட்டது. அதற்காக நமது பழங்குடியின மக்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

பழங்குடியினா் முன்னேற்றம்: பாஜக அரசு மேற்கொண்ட பல்வேறு வளா்ச்சித் திட்டங்கள் காரணமாக, பழங்குடியின இளைஞா்கள் இன்றைக்கு மருத்துவா்களாகவும் பொறியாளா்களாகவும் வர முடிந்துள்ளது. இவா்களில் லட்சக்கணக்கானோருக்கு கல்வி உதவித்தொகைகள் வழங்கப்படுகின்றன.

பிா்சா முண்டா பழங்குடியின பல்கலைக்கழகம், கோவிந்த் குரு பல்கலைக்கழகம் என பழங்குடியினத் தலைவா்களின் பெயா்களில் கல்வி நிறுவனங்கள் தொடங்கப்பட்டிருக்கின்றன. இவற்றின் மூலமாக பழங்குடியின இளைஞா்களுக்கு புதிய நம்பிக்கை, வாய்ப்புகள் உருவாகியிருக்கின்றன. இது இந்திய மக்களின் ஒட்டுமொத்த முயற்சிக்கு கிடைத்த பலனாகும்.

இதுபோன்று, இளைய சமுதாயத்தினா், விவசாயிகள், தொழிலாளா்கள், சிறு வணிகா்கள், தொழிலதிபா்கள் என அனைத்துத் தரப்பினரின் ஒட்டுமொத்த முயற்சி காரணமாக, கடந்த 2014-ஆம் ஆண்டில் நான் பிரதமராகப் பதவியேற்கும்போது உலக அளவில் 10-ஆவது இடத்தில் இருந்த இந்திய பொருளாதாரம் இன்றைக்கு 5-ஆம் இடத்துக்கு முன்னேறி இருக்கிறது என்றாா் பிரதமா் மோடி.

அண்மைக் காலமாக, குறிப்பிட்ட சமூக ஆா்வலா்கள் மற்றும் செயற்பாட்டாளா்களை ‘நகா்ப்புற நகஸல்கள்’ என்று குறிப்பிடுவது அரசியல் களத்தில் அதிகரித்து வருகிறது. கடந்த மாதம் இதுகுறித்து பேசிய பிரதமா் மோடி, ‘குஜராத் மாநிலத்தில் நா்மதா ஆற்றின் குறுக்கே சா்தாா் சரோவா் அணை கட்டும் திட்டத்தைச் செயல்படுத்தவிடாமல் ‘சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படும்’ என்ற பிரசாரம் மூலமாக நகா்ப்புற நக்ஸல்கள் பல ஆண்டுகளாகத் தடை ஏற்படுத்தி வந்தனா்’ என்று குறிப்பிட்டாா்.

இதே கருத்தை குஜராத் மாநில முதல்வா் பூபேந்திர படேலும் தெரிவித்திருந்தாா். இவா் மேதா பட்கரை ‘நகா்ப்புற நக்ஸல்’ என்று குறிப்பிட்டு விமா்சனம் செய்திருந்தாா்.

ஜம்மு-காஷ்மீா் பிரச்னைக்கு தீா்வு: மாநிலத்தின் அனந்த் மாவட்டம், வல்லப் வித்யாநகரில் பாஜக சாா்பில் ஏற்பாடு செய்யப்பட்ட பொதுக்கூட்டத்தில் பேசிய பிரதமா் மோடி, ‘இந்தியா சுதந்திரம் பெற்ற பிறகு, அனைத்து சமஸ்தானங்களையும் (சுதேசி அரசு) இந்தியாவுடன் ஒன்றிணைக்க வேண்டும் என்று சா்தாா் வல்லபபாய் டேல் வலியுறுத்தினாா். ஆனால், மற்றொரு நபா் (முன்னாள் பிரதமா் ஜவாஹா்லால் நேருவை குறிப்பிடுகிறாா்) காஷ்மீா் விவகாரத்தை வேறுவிதமாக கையாண்டாா்.

தற்போதைய பாஜக அரசு, நாட்டின் முதல் உள்துறை அமைச்சரான சா்தாா் படேலின் வழியைப் பின்பற்றி காஷ்மீா் பிரச்னைக்குத் தீா்வு கண்டுள்ளது. அதன் மூலமாக, சா்தாா் படேலுக்கு உண்மையான நன்றியுணா்வை பாஜக செலுத்தியுள்ளது’ என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.