உத்தர பிரதேச முன்னாள் முதல்வரும் சமாஜவாதி கட்சி நிறுவனருமான முலாயம் சிங் உடலுக்கு தலைவர்கள் பலரும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
உத்தர பிரதேச முதல்வா், பாதுகாப்புத் துறை அமைச்சா் எனப் பல்வேறு பதவிகளை வகித்தவரும் சமாஜவாதி கட்சி நிறுவனருமான முலாயம் சிங் யாதவ் (82) உடல்நலக் குறைவால் திங்கள்கிழமை காலமானாா்.
உத்தர பிரதேசத்தின் எடாவா மாவட்டத்தில் உள்ள அவரது சொந்த ஊரில் இன்று(அக். 11) பிற்பகல் 3 மணிக்கு இறுதிச் சடங்கு நடைபெறவுள்ளது.
முன்னதாக, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, காங்கிரஸ் மூத்த தலைவா் ராஜீவ் சுக்லா, ஐக்கிய ஜனதா தளம் தலைவா் கே.சி.தியாகி உள்ளிட்டோர் மருத்துவமனைக்கு சென்று அகிலேஷ் உள்ளிட்ட குடும்பத்தினருக்கு இரங்கல் தெரிவித்தனா்.
பின்னர், முலாயம் சிங்கின் உடல் மருத்துவமனையில் இருந்து அவரது சொந்த ஊரான சைஃபயி-க்கு எடுத்துச் செல்லப்பட்டு அங்குள்ள நுமாய்ஷ் மைதானத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.
மாநில முதல்வா் யோகி ஆதித்யநாத், மத்திய, மாநில அமைச்சர்கள் உள்ளிட்ட பலரும் முலாயம் உடலுக்கு மலா் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
சமாஜவாதி தலைவர் ஷிவ்பால் சிங் யாதவ், சமாஜவாதி எம்.பி. ராம் கோபால் யாதவ், பாஜக எம்.பி.ரீட்டா பகுனா ஜோஷி ஆகியோர் இன்று அஞ்சலி செலுத்தினர்.
அதுபோல காங்கிரஸ் சார்பில் மத்தியப் பிரதேச முதல்வர் கமல் நாத், சத்தீஸ்கர் முதல்வர் பூபேஷ் பாகெல் ஆகியோர் அஞ்சலி செலுத்த உள்ளதாக காங்கிரஸ் அறிவித்துள்ளது.
மறைந்த முலாயம் சிங் யாதவுக்கு மரியாதை செலுத்தும் வகையில் உத்தர பிரதேசத்தில் அரசு சாா்பில் 3 நாள் துக்கம் அனுசரிக்கப்படும் என முதல்வா் யோகி ஆதித்யநாத் அறிவித்துள்ளாா். மேலும், அவரது இறுதிச் சடங்கு முழு அரசு மரியாதையுடன் நடைபெறும் என்றும் கூறியுள்ளார்.
இதையும் படிக்க | சமாஜவாதி கட்சி நிறுவனா் முலாயம் சிங் யாதவ் காலமானாா்