பிகார் காவலர் பேருந்து மீது இருசக்கர வாகனம் நேருக்கு நேர் மோதிய விபத்தில் மூவர் பலியாகினர்.
சரண் மாவட்டத்தின் ரெவெல்கஞ்ச் காவல் நிலையப் பகுதியில் உள்ள தேசிய நெடுஞ்சாலை 531-ல் உள்ள தியோரியா கிராமத்திற்கு அருகில் இந்தச் சம்பவம் நடந்ததாக போலீசார் தெரிவித்தனர்.
காவல்துறை பேருந்தின் அடியில் சிக்கிய இருசக்கர வாகனம் 2 மீட்டர் தூரம் இழுத்துச் செல்லப்பட்டது. அதைத்தொடர்ந்து இருசக்கர வாகனத்தின் எரிபொருள் டேங்க் வெடித்து சிதறியது.
இந்நிலையில், இருசக்கர வாகனத்தில் பயணித்த மூவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இறந்தவர்கள் பஞ்சபிந்தா கிராமத்தைச் சேர்ந்த குந்தன் மஞ்சி(22), புல்புல் மஞ்சி(25) மற்றும் கிஷோர் மஞ்சி(24) என அடையாளம் காணப்பட்டனர்.
விபத்தில் சிக்கிய காவலர் பேருந்து, ஜெயபிரகாஷ் நாராயணின் 120வது பிறந்தநாள் நிகழ்ச்சியில் மத்திய உள்துறை அமைச்சர், அமித்ஷா, உ.பி.முதல்வர் யோகி ஆகியோர் கலந்துகொண்ட நிகழ்ச்சியில் பாதுகாப்புக்காகச் சென்றிருந்த காவல்துறை வாகனம் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்த சம்பவத்தில் போலீசார் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.