தில்லியில் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. கடந்த 12 நாள்களில் மட்டும் 635 பேருக்கு டெங்கு கண்டறியப்பட்டுள்ளது.
தலைநகரில் டெங்கு காய்ச்சல் மெல்ல அதிகரித்து வருகின்றது. இந்நிலையில் அக்டோபர் மாதம் தொடங்கி 12 நாள்களில் 635 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், மொத்த பாதிப்பு 1,572 ஆக உயர்ந்துள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
இந்த நோய்ப் பாதிப்பு பொதுவாக ஜூலை, நவம்பர் மாதங்களில் பதிவாகும். ஆனால், இந்த பாதிப்பு காலம் டிசம்பர் மத்திவரை நீடிக்கும். இந்தாண்டு, கொசுக்கள் பெருகுவதற்கு ஏற்ற காலநிலை காரணமாக டெங்கு பாதிப்புகள் முன்கூட்டியே பதிவாகும் சூழல் நிலவுகிறது.
எனினும் இதுவரை டெங்கு காய்ச்சலால் உயிரிழப்புகள் ஏதும் நிகழவில்லை என்றும், டெங்குவை கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை சுகாதாரத் துறை மேற்கொண்டுள்ளதாகவும் தில்லி அரசு தெரிவித்துள்ளது.