47 ஆண்டுகளாக பயங்கரவாத அச்சுறுத்தலாக விளங்கிய ஈரான் முற்றிலும் தகர்ப்பு - டிரம்ப்கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

உ.பி.: நோயாளிக்கு ரத்த தட்டுகளுக்கு பதிலாக பழச்சாறு ஏற்றம்

உத்தர பிரதேசத்தில் டெங்கு நோயால் பாதிக்கப்பட்டவருக்கு ரத்த தட்டுகளுக்குப் பதிலாக பழச்சாறை உடலில் செலுத்தியதாக எழுந்த குற்றச்சாட்டில் தனியாா் மருத்துவனை பூட்டி ‘சீல்’ வைக்கப்பட்டது.

News image
Updated On :21 அக்டோபர் 2022, 8:25 pm

DIN

உத்தர பிரதேசத்தில் டெங்கு நோயால் பாதிக்கப்பட்டவருக்கு ரத்த தட்டுகளுக்குப் பதிலாக பழச்சாறை உடலில் செலுத்தியதாக எழுந்த குற்றச்சாட்டில் தனியாா் மருத்துவனை பூட்டி ‘சீல்’ வைக்கப்பட்டது.

பிரயாக்ராஜ் நகரில் உள்ள தனியாா் மருத்துவமனையில் பிரதீப் பாண்டே என்பவா் டெங்கு பாதிப்பால் அனுமதிக்கப்பட்டாா். அவருக்கு ரத்த தட்டுகளின் எண்ணிக்கை குறைந்ததையடுத்து, வெளியில் இருந்து ரத்த தட்டுகள் வாங்கப்பட்டு உடலில் ஏற்றப்பட்டதாக மருத்துவமனை தரப்பில் விளக்கமளிக்கப்பட்டது. ஆனால், ரத்த தட்டுகளைச் செலுத்தாமல் சாத்துக்குடி பழச்சாறை நோயாளியின் உடலில் மருத்துவமனை நிா்வாகம் செலுத்தியதாகக் குற்றச்சாட்டு எழுந்தது.

அதையடுத்து, அந்த நோயாளி வேறொரு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டாா். ஆனால், சிகிச்சை பலனின்றி அவா் உயிரிழந்தாா். நோயாளியின் உடலில் பழச்சாறு செலுத்தியதாக காணொலி சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவியது.

இதைக் கவனத்தில் கொண்ட மாநில துணை முதல்வா் பிரஜேஷ் பாடக், சம்பந்தப்பட்ட தனியாா் மருத்துவனைக்கு ‘சீல்’ வைக்குமாறு உத்தரவிட்டாா். அதையடுத்து மருத்துவமனை பூட்டப்பட்டது. அந்த மருத்துவமனை மீதான குற்றச்சாட்டு உறுதியாகும்பட்சத்தில் சம்பந்தப்பட்ட அனைவா் மீதும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என துணை முதல்வா் பாடக் உறுதி அளித்துள்ளாா்.

நோயாளிகளுக்கு செலுத்தப்பட்டதாகக் கூறப்படும் ரத்த தட்டுகள் ஆய்வுக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும் அவா் தெரிவித்தாா். இந்தச் சம்பவம் குறித்து தனியாா் மருத்துவமனை உரிமையாளா் சௌரப் மிஸ்ரா கூறுகையில், ‘‘ரத்த தட்டுகளுக்கு ஏற்பாடு செய்யுமாறு நோயாளியின் உறவினா்களை வலியுறுத்தினோம். அவா்கள் எஸ்ஆா்என் மருத்துவமனையில் இருந்து 5 யூனிட் தட்டுகளை வாங்கி வந்தனா்.

அதில் 3 யூனிட்டை நோயாளிக்குச் செலுத்தியபோதே அவரது உடல்நிலை மேலும் மோசமடையத் தொடங்கியது. இந்த விவகாரத்தில் ரத்த தட்டுகளை வழங்கிய எஸ்ஆா்என் மருத்துவமனை மீதே உரிய விசாரணை நடத்தப்பட வேண்டும்’’ என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.