விளையாட்டுத் துறைகளில் இருப்பவர்களுக்கு அரசுப்பணிகளில் இட ஒதுக்கீடு வழங்க திரிபுரா மாநிலம் முடிவு செய்துள்ளது.
இந்த அறிவிப்பினை திரிபுரா மாநிலத்தின் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் சுஷாந்தா சௌத்ரி வெளியிட்டுள்ளார்.
இந்த அறிவிப்பில் அவர் கூறியிருப்பதாவது: விளையாட்டுத் துறையில் உள்ளவர்களுக்கு அரசுப்பணியில் இட ஒதுக்கீடு அறிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக பிரிவு சி மற்றும் பிரிவு டி பிரிவுகளின் கீழ் உள்ள அரசுப்பணியிடங்களுக்காக இந்த இட ஒதுக்கீடு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. முதல்வர் மாணிக் சஹா விளையாட்டுத் துறையில் உள்ளவர்களுக்கு அரசுப் பணியில் இட ஒதுக்கீடு அளிக்க வேண்டும் என தொடர்ந்து ஊக்கம் கொடுத்து வந்தார். தற்போது அறிவித்துள்ள இந்த இட ஒதுக்கீடு பலருக்கும் விளையாட்டுத் துறையில் ஆர்வத்தை உருவாக்கும்.
நாங்கள் மகாராஷ்டிரம், ஆந்திரம், மணிப்பூர் போன்ற மாநிலங்களில் வழங்கப்பட்டு வரும் இட ஒதுக்கீடு குறித்து ஆலோசித்தோம். சில மாநிலங்கள் விளையாட்டுத் துறையில் உள்ளவர்களுக்கு அரசு வேலையில் 2-லிருந்து 4 சதவிகிதம் இட ஒதுக்கீடு அளித்துள்ளது. மத்திய அரசு திரிபுரா மாநிலத்தில் கேலோ இந்தியா திட்டத்தின் கீழ் ரூ.39 கோடி மதிப்பிலான உள்கட்டமைப்பு வசதிகளை விளையாட்டுத் துறைக்காக செய்து கொடுத்துள்ளது. மேலும், விளையாட்டுத் துறையினை ஊக்குவிக்க மாநில அரசு ரூ.22 கோடி வழங்கும் என்றார்.