கரோனா தொற்றுக்கு பின்னர் இந்தியாவில் 21.4 லட்சம் பேர் காச நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக உலக சுகாதார மையம் அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளது.
கடந்த 2019 ஆம் ஆண்டு இறுதியில் உலகம் முழுவதும் பரவி மக்களை ஆட்டிப்படைத்த கரோனா பெருந்தொற்று 2 ஆண்டுகளுக்கு பின்னர் தற்போது கட்டுக்குள் வந்துள்ளது.
இந்நிலையில், கரோனா தொற்றுக்கு பின்னர் இந்தியாவில் 21.4 லட்சம் பேர் காச நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்ற அதிர்ச்சி தகவலை உலக சுகாதார மையத்தின் சர்வதேச காச நோய் பிரிவு தெரிவித்துள்ளது.
உலக முழுவதும் கரோனாவுக்கு 65 லட்சம் பேர் பலியாகினர். அவர்களில் இந்தியாவில் மட்டும் 5.2 லட்சம் பேர் உயிரிழந்துள்ள நிலையில், அதன் தாக்கம் வேறு நோய் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.
அதாவது, அடங்கியிருந்த காச நோய் மீண்டும் தலைதூக்கியுள்ளது.
கடந்த 2021 இல் நாட்டில் 22 கோடிக்கும் அதிகமானோருக்கு காச நோய் பரிசோதனை நடத்தப்பட்டது. அதில் 21.4 லட்சம் பேருக்கு காச நோயால் பாதிக்கப்பட்டுள்ளது பரிசோதனை முடிவில் தெரியவந்துள்ளது. "2021 இல் 1 லட்சம் பேரில் 210 பேர் காச நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இது கடந்த 2020 ஆம் ஆண்டின் பாதிப்பை விட 18 சதவீதம் அதிகம். இந்த புள்ளிவிவரங்கள் அடிப்படையில் இந்தியா 36 ஆவது இடத்தில் உள்ளது.
உலக அளவில் 28 சதவீதம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அதில், இந்தியா உள்பட 8 நாடுகள் அடங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.