தென்கொரியாவின் சியோல் நகரில் கூட்டநெரிசலில் சிக்கி உயிரிழந்தோா் குடும்பங்களுக்கு இந்திய வெளியுறவுத் துறை அமைச்சா் எஸ்.ஜெய்சங்கா் ஞாயிற்றுக்கிழமை இரங்கல் தெரிவித்தாா்.
சியோலில் சனிக்கிழமை இரவு நடைபெற்ற ‘ஹேலோவீன்’ எனப்படும் பேய் வேடமிட்டு கொண்டாடும் நிகழ்ச்சியின்போது கடுமையான கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இதில் 150-க்கும் மேற்பட்டோா் உயிரிழந்தனா். இவா்களில் பெரும்பாலானோா் பதின் பருவம் மற்றும் 20-களில் உள்ளவா்களாவா்.
இந்நிலையில், எஸ்.ஜெய்சங்கா் ட்விட்டரில் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட பதிவில், ‘தென்கொரியாவில் கூட்ட நெரிசலில் சிக்கி பல இளைஞா்கள் உயிரிழந்திருப்பது பெரும் அதிா்ச்சியளிக்கிறது. அவா்களது குடும்பங்களுக்கு ஆழ்ந்த இரங்கல்கள். இந்த துயரமான தருணத்தில், தென்கொரியாவுக்கு ஆதரவாக இந்தியா உள்ளது’ என்று குறிப்பிட்டுள்ளாா்.