கர்நாடக மாநிலத்தின் நுகர்வோர் மற்றும் வனத்துறை அமைச்சராக இருந்த உமேஷ் கட்டி(61) மாரடைப்பால் இன்று காலமானார்.
பெங்களூருவில் நேற்று பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்ற அமைச்சர், நேற்று இரவு வீட்டில் உணவு அருந்திய பின்பு குளியறைக்கு சென்றுள்ளார். நீண்ட நேரமாகியும் வெளியே வராததால் சந்தேகமடைந்த பணியாளர்கள் கதவை திறந்து பார்த்தபோது அமைச்சர் உமேஷ் மாரடைப்பு ஏற்பட்டு மயங்கி விழுந்து கிடந்துள்ளார். உடனடியாக அவரை மீட்ட குடும்பத்தினர் தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர்.
ஆனால், சிகிச்சைப் பலனின்றி இன்று அதிகாலை 2 மணியளவில் அமைச்சர் உயிரிழந்துவிட்டதாக மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து, கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை மற்றும் மூத்த அமைச்சர்கள் மருத்துவமனைக்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர்.
மேலும், பாஜக தலைவர்கள் மற்றும் அரசியல் தலைவர்கள் உயிரிழந்த அமைச்சரின் குடும்பத்தினருக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.