காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி முதலில் நாட்டின் வரலாற்றைப் படிக்க வேண்டும் என உள்துறை அமைச்சர் அமித் ஷா தாக்கிப் பேசியுள்ளார்.
ராகுல் காந்தியின் பாரதத்தை இணைப்போம் யாத்திரை குறித்து அமித் ஷா பேசியதாவது: “ வெளிநாட்டு தயாரிப்பில் உருவான ஆடையை அணிந்து கொண்டு ராகுல் காந்தி பாரதத்தை இணைப்போம் யாத்திரையை மேற்கொண்டு வருகிறார். அவர் நாடாளுமன்றத்தில் பேசியதை அவருக்கும் அவரது கட்சியினருக்கும் நினைவு கூற விரும்புகிறேன். இந்தியா ஒரு தேசமே கிடையாது என அவர் கூறியிருந்தார். இதை எந்தப் புத்தகத்தில் அவர் படித்தார். இந்த தேசத்திற்காக லட்சக்கணக்கான மக்கள் தங்கள் இன்னுயிரை தியாகம் செய்துள்ளனர். ராகுல் பாரதத்தை இணைக்க சென்றுள்ளார், ஆனால், அவர் இந்திய வரலாற்றை முதலில் படிக்க வேண்டும் என நான் நினைக்கிறேன். காங்கிரஸால் நாட்டின் முன்னேற்றத்திற்காக உழைக்க முடியாது. காங்கிரஸால் வாக்கு வங்கிக்காக மட்டுமே உழைக்க முடியும்.” என்றார்.