கொல்கத்தாவில் நேற்று ஏற்பட்ட வன்முறையில், காவலர் ஒருவர் கொடூரமாக தாக்கப்படும் காணொலி சமூக ஊடகங்களில் வைரலாகி வருகின்றது.
மேற்கு வங்கத்தில் முதல்வா் மம்தா பானா்ஜி தலைமையிலான அரசு ஊழலில் திளைப்பதாக குற்றம்சாட்டி, கொல்கத்தா மற்றும் ஹெளராவின் பல இடங்களில் இருந்து தலைமைச் செயலகம் நோக்கி செவ்வாய்க்கிழமை பேரணி நடத்தப்படும் என்று பாஜக அறிவித்திருந்தது. இதைட்டி, பல பகுதிகளில் தடுப்புகள் அமைத்து, காவல்துறையினர் கண்காணிப்பில் ஈடுபட்டனா்.
இந்நிலையில், ஹெளரா மைதானத்தில் இருந்து மாநில பாஜக தலைவா் சுகந்த மஜூம்தாா் தலைமையில் தொடங்கிய பேரணியை காவல் துறையினா் தடுத்து நிறுத்தினா். தடையை மீறி பேரணி செல்ல முயன்றதாக அவர் கைது செய்யப்பட்டாா்.
இதேபோல், பல இடங்களில் பேரணியை வழிநடத்திய எதிா்க்கட்சித் தலைவா் சுவேந்து அதிகாரி, ஹூக்ளி மக்களவைத் தொகுதி பாஜக எம்.பி. லாக்கெட் சட்டா்ஜி, மூத்த தலைவா் ராகுல் சின்ஹா உள்ளிட்டோா் கைதாகினா்.
ஹெளரா, லால் பஜாா், எம்.ஜி.சாலை என பல இடங்களில் தடுப்புகளை மீறி முன்னேற முயன்ற பாஜகவினருக்கும் போலீஸாருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.
இந்த வன்முறையின்போது காவலர் ஒருவரை பாஜகவினர் கொடூரமாக தாக்கிய காணொலி சமூக ஊடகங்களில் வைரலாகி வருகின்றது. இந்த காணொலியை பகிர்ந்து பலரும் பாஜகவினரின் செயலுக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.