காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி இரண்டாவது முறையாக ஒரு நாள் ஓய்வுக்குப் பின்னர் சனிக்கிழமை காலை கேரள மாநிலம், பெரும்பாரா சந்திப்பில் இருந்து தனது 16 ஆவது நாள் நடைப்பயணத்தை மேற்கொண்டு வருகிறார்.
மத்தியில் ஆளும் பாஜகவுக்கு எதிராக மக்களை ஒன்றுதிரட்டும் நோக்கில் ‘பாரத் ஜோடோ’ நடைப்பயணத்தை காங்கிரஸ் நடத்தி வருகிறது. அக்கட்சி எம்.பி. ராகுல் காந்தி நடைப்பயணத்தை முன்னின்று நடத்தி, செல்லும் இடங்களில் மக்களைச் சந்தித்து வருகிறாா். தமிழகத்தில் நிறைவடைந்த நடைப்பயணம், தற்போது கேரளத்தில் நடைபெற்று வருகிறது.
கேரளத்தில் நடைப்பயணம் மேற்கொண்டு வரும் காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி, பெரும்பாரா சந்திப்பு பகுதியிலிருந்து சனிக்கிழமை காலை 6.30 மணியளவில் நடைப்பயணத்தை தொடர்ந்தார்.
ராகுல் காந்தி நடைப்பயணம் பகல் 10 மணி தோபே ஸ்டேடியம் சென்றடைந்ததும் அங்கு கூடியிருந்த கட்சியனர் மற்றும் பொதுமக்களை சந்தித்துப் பேசினார்.
கேரளம் மாநிலத்தில் கடந்த 11 ஆம் தேதி தொடங்கிய ராகுல் நடைப்பயணம் வரும் 29 ஆம் தேதி முடிவடைகிறது.
மொத்தம் 150 நாள்கள் நடைபெறும் நடைப்பயணம் கடந்த 7 ஆம் தேதி கன்னியாகுமரியில் தொடங்கி காஷ்மீர் வரை நடைபெறுகிறது. இதில் 3,600 கி.மீ. நடைப்பயணம் நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.