ஜனநாயக ஆசாத் கட்சி என்கிற புதிய கட்சியை குலாம் நபி ஆசாத் இன்று ஜம்முவில் தொடங்கினார்.
காங்கிரஸில் 50 ஆண்டுகளுக்கும் மேலாக இருந்த ஆசாத் (73), கட்சியின் ஒட்டுமொத்த கட்டமைப்பை ராகுல் காந்தி சீா்குலைத்துவிட்டதாக பரபரப்புக் குற்றச்சாட்டை முன்வைத்து, கட்சியிலிருந்து கடந்த மாதம் 26-ஆம் தேதி விலகினாா். அவருக்கு ஆதரவு தெரிவித்து, ஜம்மு-காஷ்மீரில் மூத்த நிா்வாகிகள் பலா் காங்கிரஸிலிருந்து வெளியேறினா்.
இதனிடையே, தான் பாஜகவில் இணையப் போவதில்லை என்றும், புதிய கட்சியை தொடங்கவிருப்பதாகவும் ஆசாத் கூறியிருந்தாா். இன்னும் பெயரிடப்படாத தனது புதிய கட்சிக்கான கொள்கைகளை இம்மாதத் தொடக்கத்தில் அவா் அறிவித்தாா்.
இதையும் படிக்க- சட்டப்படி நடவடிக்கை: சூர்யா படத் தயாரிப்பாளர்கள் எச்சரிக்கை
ஜம்மு-காஷ்மீருக்கான மாநில அந்தஸ்தை மீட்பது, உள்ளூா் மக்களுக்கான வேலைவாய்ப்பு உரிமையை உறுதி செய்வது, காஷ்மீா் பண்டிட்களின் மறுகுடியமா்த்துதல் உள்ளிட்டவற்றை கொள்கைகளாக கொண்டு, தனது கட்சி செயல்படுமென அவா் அப்போது தெரிவித்தாா்.
இந்த நிலையில் ஜம்முவில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ஜனநாயக ஆசாத் என்கிற புதிய கட்சியை குலாம் நபி ஆசாத் இன்று தொடங்கினார். இந்நிகழ்வின்போது தமது கட்சியின் கொடியையும் அவர் அறிமுகம் செய்து வைத்தார்.