
மேற்கு வங்கத்தில் ஆசன்சோல் மக்களவைத் தொகுதி மற்றும் பாலிகஞ்ச் சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தலில் திரிணமூல் காங்கிரஸ் முன்னிலை வகிக்கிறது.
மேற்கு வங்கத்தில் உள்ள ஆசன்சோல் மக்களவைத் தொகுதி மற்றும் பாலிகஞ்ச் சட்டப்பேரவைத் தொகுதிக்கு கடந்த செவ்வாய்க்கிழமை இடைத்தேர்தல் நடைபெற்றது. ஆசன்சோலில் 64.03 சதவிகித வாக்குகளும், பாலிகஞ்சில் 41.1 சதவிகித வாக்குகளும் பதிவாகின.
இவற்றுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று (சனிக்கிழமை) காலை தொடங்கி நடைபெற்று வருகிறது. மூன்று சுற்று வாக்கு எண்ணிக்கை நிலவரப்படி பாலிகஞ்ச் தொகுதியில் திரிணமூல் வேட்பாளர் பாபுல் சுப்ரியோ முன்னிலை வகிக்கிறார்.
ஆசன்சோல் தொகுதியில் திரிணமூல் வேட்பாளர் சத்ருகன் சின்ஹா பாஜக வேட்பாளரைவிட 10,989 வாக்குகள் முன்னிலையில் உள்ளார்.
ஆசன்சோல் தொகுதி பாஜக எம்.பி.யாக இருந்த பாபுல் சுப்ரியோ பதவியை ராஜிநாமா செய்து கட்சியிலிருந்து விலகி திரிணமூல் காங்கிரஸில் இணைந்தார். பிறகு, பாலிகஞ்ச் இடைத்தேர்தலில் திரிணமூல் வேட்பாளராக அவர் அறிவிக்கப்பட்டார். காங்கிரஸிலிருந்து விலகி திரிணமூல் காங்கிரஸில் இணைந்த நடிகர் சத்ருகன் சின்ஹா அக்கட்சி சார்பில் ஆசன்சோல் தொகுதியில் போட்டியிட்டார்.