பெங்களூருவில் 11 வயது சிறுமி ஊஞ்சலில் ஆடிக் கொண்டிருந்த போது, அந்த ஊஞ்சல் கயிறு அவரை இறுக்கியதில் பலியான சம்பவம் பலரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.
பல பள்ளிகளில் கோடை விடுமுறை தொடங்கியிருக்கும் நிலையில், பெற்றோர்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்பதை உணர்த்தும் வகையில் கெடுபயனாக இந்த சம்பவம் அமைந்துவிட்டது.
இதையும் படிக்க.. அடுத்த அலை உருவாகுமா? கேள்விக்குக் கிடைத்த நல்ல பதில்
பெற்றோர் கீழ்தளத்தில் இருந்த போது, அவர்களது 11 வயது மகள் முதல் தளத்தில் ஸ்விங் ஆகும் ஊஞ்சலில் விளையாடிக் கொண்டிருந்திருக்கிறாள். வெகு நேரமாக எந்த சத்தமும் வராததால் பெற்றோர் மாடிக்குச் சென்று பார்த்த போதுதான், அந்த ஊஞ்சல் கயிறில், சிறுமி சிக்கிக் கொண்டிருந்தது தெரிய வந்தது. உடனடியாக அவரை மீட்டு பெற்றோர் மருத்துவமனைக்கு அழைத்து வந்த போது அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் கூறிவிட்டனர்.
இது குறித்து காவலர்கள் இயற்கைக்கு மாறான மரணம் என்று வழக்குப் பதிவு செய்து, சிறுமியின் தந்தை அளித்த வாக்குமூலத்தை பதிவு செய்துள்ளனர்.
ஏற்கனவே, கடந்த ஆண்டுகளிலும் ஊஞ்சல் கயிறில் சிக்கி குழந்தைகள் பலியான சம்பவங்கள் நிகழ்ந்திருப்பதால், பெற்றோர்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்றும் பிள்ளைகளை தனியாக விளையாட விட வேண்டாம் என்றும் காவல்துறையினர் எச்சரித்துள்ளனர்.
பெங்களூருவில் கடந்த திங்கள்கிழமை நிகழ்ந்த இந்த சம்பவம் குறித்த செய்தி, பெற்றோர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் தற்போது பலராலும் பகிரப்பட்டு வருகிறது.