இந்தியாவின் 'ஆர்' மதிப்பானது அல்லது கரோனா பரவும் வேகமானது கடந்த மூன்று மாதங்களில் முதல் முறையாக 1.0 ஆக அதிகரித்துள்ளது.
சென்னையில் உள்ள கணிதவியல் அறிவியல் மையம் மேற்கொண்ட ஆராய்ச்சியில் இந்த தகவல் வெளியாகியிருப்பதாக பிடிஐ செய்தி வெளியிட்டுள்ளது.
இந்த 'ஆர்' மதிப்பானது ஏப்ரல் 12-18ம் தேதிகளில் 1.07 ஆக அதிகரித்திருப்பதாகவும் இது 5-11ஆம் தேதிகளில் 0.93 ஆக இருந்ததாகவும் ஆராய்ச்சியாளர் சீதாப்ரா சின்ஹா தெரிவித்துள்ளார்.
நாட்டில் கரோனா பரவும் வேகத்தைக் குறிக்கும் 'ஆர்' மதிப்பு இதற்கு முன்பு கடைசியாக ஒரு புள்ளியை தாண்டியது கடந்த ஜனவரி 16-22ஆம் தேதிகளில்தான்.
இது தில்லியில் கரோனா அதிகரித்திருப்பதால் மட்டுமல்ல, ஹரியாணா, உத்தரப்பிரதேச மாநிலங்களின் எதிரொலியாகவும் உள்ளது என்றும் சின்ஹா கூறியுள்ளார். இவர் நாட்டில் கரோனா பேரிடர் தொடங்கியது முதல் 'ஆர்' மதிப்பை தொடர்ந்து கண்காணித்து வருகிறார்.
நாட்டின் பெரும்பாலான நகரங்களான மும்பை, பெங்களூரு, சென்னை போன்றவற்றிலும் 'ஆர்'மதிப்பானது ஒன்றுக்கு மேல்தான் உள்ளது. குறிப்பாக தில்லி, உத்தரப்பிரதேசத்தில் இது 2.0 ஆக உள்ளது என்கிறார்.
'ஆர்' மதிப்பு என்றால் என்ன?
'ஆர்' என்பது 'ஆர்ஓ' (R0) (ஆர்-நாட்) எனப்படுகிறது. இது ஒரு வைரஸ் இனப்பெருக்கம் செய்யும் காலத்தை குறிக்கிறது.
இந்த 'ஆர்' மதிப்பைக் கொண்டு ஒரு வைரஸ் எவ்வாறு இனப்பெருக்கம் செய்கிறது, ஒரு பகுதிக்குள் எத்தனை வேகமாக அது பரவுகிறது, எது மிகவும் அபாயத்தை ஏற்படுத்துகிறது என்பதை கண்காணிக்க உதவுகிறது.
இந்த 'ஆர்' என்பது ஒருவரிடமிருந்து எத்தனை பேருக்கு கரோனா பரவுகிறது என்பதை குறிப்பதாக அமைகிறது.