லண்டன்: கரோனா பாதித்து நீண்ட நாள்கள் சிகிச்சையில் இருந்தவர்களில், ஆண்களை விடவும், பெண்களுக்கே அதிக அறிகுறிகள் பாதிப்புகள் நீண்ட காலத்துக்கு இருப்பதாக ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.
பெண்களின் உடல்நலம் என்ற மருத்துவ இதழில் வெளியாகியிருக்கும் ஆய்வுக் கட்டுரையில், கரோனா பாதித்திருந்த போது, பெரும்பாலான பெண்களே அதிக மயக்கம், நெஞ்சுவலி, படபடப்பு உள்ளிட்ட பாதிப்புகளை ஆண்களைவிடவும் அதிகமாக உணர்ந்ததாகக் கூறப்பட்டுள்ளது.
கரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டு 12 வாரங்கள் சிகிச்சை பெற்றுவர்களை நீண்ட கரோனா நோயாளிகள் என்கிறார்கள். அந்த வகையில், இத்தாலியில் உள்ள பார்மா பல்கலைக்கழகம் நடத்திய ஆய்வில், சுமார் 200க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.
இவர்களில் 91 சதவீதம் பேர் 5 மாதங்களுக்கும் மேல் கரோனா பாதிப்பால் ஏற்பட்ட நோய்களால் அவதிப்பட்டு வந்ததாகக் கூறியுள்ளனர். அவர்களில் ஆண்களை விடவும் பெண்களே அதிக பாதிப்புக்கும், அதிக நாள் பாதிப்புக்கும் உள்ளாகியிருப்பதாகக் கூறியுள்ளனர்.