குஜராத் மாநில எம்.எல்.ஏ. ஜிக்னேஷ் மேவானி அஸ்ஸாம் போலீசாரால் மீண்டும் கைது செய்யப்பட்டுள்ளார்.
‘பிரதமா் நரேந்திர மோடி, கோட்சேவை கடவுளாகக் கருதக் கூடியவா்’ என்று ட்விட்டரில் பதிவிட்ட குஜராத் மாநில சுயேச்சை எம்எல்ஏவும், தலித் உரிமைகள் அமைப்பின் தலைவருமான ஜிக்னேஷ் மேவானி கடந்த புதன்கிழமை அஸ்ஸாம் போலீஸாரால் கைது செய்யப்பட்டாா்.
ட்விட்டா் பதிவு தொடா்பாக அஸ்ஸாமைச் சோ்ந்த பாஜக பிரமுகா் அளித்த புகாரின் பேரில் இந்தக் கைது நடவடிக்கை எடுக்கப்பட்டது. குஜராத்துக்கு வந்து மேவானியை கைது செய்த அஸ்ஸாம் காவல் துறையினா் அவரைத் தங்கள் மாநிலத்துக்கு விசாரணைக்காக அழைத்துச் சென்றனா்.
இதையும் படிக்க- சிவகார்த்திகேயன் வழக்கு: உயர்நீதிமன்றம் உத்தரவு
இதனிடையே, இவ்வழக்கில் அஸ்ஸாம் நீதிமன்றம் இன்று அவருக்கு ஜாமீன் வழங்கியது. ஆனால் ஜாமீனில் வெளிவந்த அடுத்த ஒரு மணிநேரத்தில் ஜிக்னேஷ் மேவானியை மற்றொரு வழக்கில் அஸ்ஸாம் போலீசார் மீண்டும் கைது செய்துள்ளனர். அதிகாரிகளை தாக்கியதாக பதிவான வழக்கில் அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இது அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை என்று ஜிக்னேஷ் மேவானி தெரிவித்துள்ளார்.