ஆந்திர மாநில சுங்கச்சாவடி ஒன்றில் கட்டணம் செலுத்தாமல் சென்ற லாரியை நிறுத்த முயன்ற ஊழியரை லாரி முன்புறம் வைத்து ஓட்டிச்சென்ற ஓட்டுநரின் செயல் பரபரப்பை ஏற்படுத்தியது.
கட்டணம் செலுத்தாமல் சென்ற ஓட்டுநரைப் பிடிக்கும் வகையில் லாரியின் முன்புறம் சுங்கச்சாவடி ஊழியர் ஏறியுள்ளார். அப்போதும் லாரியை நிறுத்தாத ஓட்டுநர், தொங்கியபடி நின்றிருந்த ஊழியருடன் சுமார் 10 கீலோமீட்டர் தொலைவுக்கு லாரியை ஓட்டிச்சென்றுள்ளார்.
ஆந்திர மாநிலம் கண்ணூர் மாவட்டத்தில் உள்ள அமக்கதாடு அருகேவுள்ள சுங்கச்சாவடியில் ஹரியானா மாநிலத்தைச் சேர்ந்த லாரி கட்டணத்தை செலுத்தாமல் சென்றுள்ளது.
இதனால் சுங்கச்சாவடி ஊழியர் சீனிவாசலு லாரியின் முன் பக்கம் இருக்கும் பம்பர் மீது ஏறி ஓட்டுநரைப் பிடிக்க முயன்றுள்ளார். ஆனால் ஓட்டுநர் ஊழியரைப் பொருட்படுத்தாமல், லாரியை வேகமாக இயக்கியுள்ளார்.
இதனால் அதிர்ச்சி அடைந்த சுங்கச்சாவடி ஊழியர்கள் இருசக்கர வாகனத்தில் லாரியைப் பின்தொடர்ந்து வந்துள்ளனர். பின்னர் தேசிய நெடுஞ்சாலை ரோந்துப் பணி காவலர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
லாரி ஓட்டுநரை மற்றொரு வாகனத்தில் துரத்திப் பிடித்த காவலர்கள், ஓட்டுநரை கைது செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். இது தொடர்பான விடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.