புது தில்லி: இந்தியாவுக்கும் ஜப்பானுக்கும் இடையிலான தூதரக உறவுகளின் 70 ஆண்டுகளைக் குறிக்கும் வகையில், இரு நாடுகளுக்கும் இடையிலான ஆழமான உறவுகள் குறித்து மனநிறைவு அடைந்துள்ளதாக பிரதமர் நரேந்திர மோடி வியாழக்கிழமை தெரிவித்தார்.
இந்தியாவுக்கும் ஜப்பானுக்கும் இடையே தூதரக உறவை நிறுவி இன்றுடன் 70 ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில் பொருளாதாரம் மற்றும் மக்களிடையேயான தொடர்பு என அனைத்து துறைகளிலும் இருநாட்டு உறவுகள் ஆழமடைந்திருப்பதைக் கண்டு மகிழ்ச்சி அடைகிறேன் என்று பிரதமர் மோடி சுட்டுரையில் கூறியுள்ளார்.
சமீபத்தில் நண்பர் பிரதமர் கிஷிடா உச்சி மாநாட்டிற்காக இந்தியாவிற்கு வருகை தந்தது, உலகளாவிய கூட்டாண்மையை ஆழப்படுத்துவதற்கான ஒரு வரைபடத்தை வகுத்துள்ளது. அந்த நோக்கத்தை நிறைவேற்ற பிரதமர் கிஷிடா உடன் தொடர்ந்து பணியாற்ற நான் விரும்புகிறேன் என்று பிரதமர் மோடி கூறினார்.
ஜப்பானிய பிரதமர் ஃபுமியோ கிஷிடா, இந்திய பிரதமர் நரேந்திர மோடியுடன் 14-வது இந்தியா-ஜப்பான் வருடாந்திர உச்சிமாநாட்டிற்காக மார்ச் 19-20 தேதிகளில் இரண்டு நாள் பயணமாக இந்தியாவுக்கு வந்தார். பிரதமர் கிஷிடாவின் முதல் இருதரப்புப் பயணம் இதுவாகும்.
இந்த பயணத்தின் போது, எரிசக்தி கூட்டாண்மை, இந்தியாவின் வடகிழக்கு மற்றும் மூங்கில் சாகுபடி மற்றும் செயலாக்கம் ஆகியவற்றில் இரு நாடுகளுக்கு இடையே பல புதிய முயற்சிகளை தொடங்குவதை வரவேற்றனர்.
மேலும், அமெரிக்கா, ஆஸ்திரேலியா, ஜப்பான் மற்றும் இந்தியா ஆகிய நாடுகளின் தலைவர்களின் உச்சிமாநாடு மே 24-ம் தேதி டோக்கியோவில் நடைபெறவுள்ள நிலையில், அடுத்த மாதம் பிரதமர் மோடி ஜப்பான் பிரதமர் கிஷிடாவை மீண்டும் சந்திப்பார்.