கடந்த ஜூலை மாதம் அதிகபட்சமாக 600 கோடி யுபிஐ பரிவர்த்தனைகள் செய்யப்பட்டுள்ளதற்கு பிரதமர் நரேந்திர மோடி பாராட்டு தெரிவித்துள்ளார்.
எண்ம(டிஜிட்டல்) பணப்பரிவர்த்தனையை ஊக்குவிக்கும் பொருட்டு கடந்த 2016 ஆம் ஆண்டு யுனிஃபைடு பேமண்ட்ஸ் இண்டா்ஃபேஸ் (யுபிஐ) எனும் யுபிஐ எண்ம பரிவர்த்தனை அறிமுகம் செய்யப்பட்டது.
அதன்படி, யுபிஐ பயன்பாடு ஒவ்வொரு மாதமும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. கடந்த 2016 முதல் இதுவரையிலான காலகட்டத்தில் கடந்த ஜூலை மாதம் அதிகபட்சமாக 600 கோடி யுபிஐ பரிவர்த்தனைகள் செய்யப்பட்டுள்ளது. இம்மாதத்தில் யுபிஐ பணப்பரிவர்த்தனையின் மதிப்பு ரூ. 10.62 லட்சம் கோடி ஆகும்.
தேசிய பணப்பட்டுவாடா நிறுவனம்(என்பிசிஐ) இதுகுறித்த தகவலை வெளியிட்டுள்ளது.
கடந்த மாதத்தைவிட பரிவர்த்தனை எண்ணிக்கை 7.16 சதவிகிதமும் அதன் மதிப்பு 4.76 சதவிகிதமும் அதிகரித்துள்ளது.
இந்நிலையில் இதுகுறித்த மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனின் பதிவுக்கு பதில் அளித்துள்ள பிரதமர் நரேந்திர மோடி, 'இது ஒரு சிறப்பான சாதனை. புதிய தொழில்நுட்பங்களை ஏற்றுக்கொள்வதற்கும் பொருளாதாரத்தை ஒழுங்குபடுத்துவதற்கும் இந்திய மக்களின் கூட்டு உறுதியை இது குறிக்கிறது. கரோனா தொற்றுநோய்களின்போது எண்ம பணப்பரிவர்த்தனை குறிப்பாக உதவியாக இருந்துள்ளது' என்று குறிப்பிட்டுள்ளார்.
இதையும் படிக்க | ருசிக்க தயாரா? சென்னை தீவுத்திடலில் உணவுத் திருவிழா