மக்களுக்கு வழங்கும் இலவசங்களை ஒழிப்பதற்கு முன் எம்பிக்கள் தங்களது ஓய்வூதியம் உள்ளிட்ட சலுகைகளை விட்டுத்தருவார்களா என பாஜக எம்பி வருண் காந்தி கேள்வி எழுப்பியுள்ளார்.
நடைபெற்று வரும் நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடரில் மக்களுக்கு வழங்கப்படும் இலவசங்களுக்கு தடை விதிப்பது தொடர்பாக விவாதிக்கக் கோரி பாஜக நாடாளுமன்ற உறுப்பினர் சுஷில் மோடி மாநிலங்களவையில் நோட்டீஸ் வழங்கியிருந்தார்.
இதையும் படிக்க | ஆயுதப் படைகளில் எத்தனை பெண்கள்? மாநிலங்களவையில் தகவல்
இதனைக் குறிப்பிட்டு பாஜகவின் எம்பியான வருண் காந்தி சுட்டுரையில் கருத்து பதிவிட்டுள்ளார். அதில் அவர், “நாடாளுமன்ற உறுப்பினர் சுஷில் மோடி இலவசங்களை ஒழிப்பது தொடர்பாக விவாதிப்பதற்கு முன்மொழிந்துள்ளார். ஆனால் மக்களுக்கு வழங்கப்படும் இலவசங்களைக் குறித்து கேள்வி எழுப்புவதற்கு முன் நம் நிலைகளை உற்றுப்பார்க்க வேண்டும். இலவசங்களை ஒழிப்பதற்கு முன் எம்பிக்களுக்கு கிடைக்கும் ஓய்வூதியம் உள்ளிட்ட சலுகைகளை ரத்து செய்வதுவிட்டு ஏன் விவாதத்தைத் தொடங்கக் கூடாது? எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.
அதனைத் தொடர்ந்து தன்னுடைய மற்றொரு பதிவில் வருண் காந்தி, “கடந்த 5 ஆண்டுகளில் 4.13 கோடி மக்களுக்கு சமையல் எரிவாயு கிடைக்கவில்லை. 7.67 கோடி மக்கள் ஒரே ஒருமுறை தங்களது சமையல் எரிவாயு உருளையில் எரிவாயுவை நிரப்பியுள்ளனர். வீட்டு உபயோகத்திற்கான சமையல் எரிவாயுவின் விலையை உயர்த்துவது, மானியங்களை தவிர்ப்பது ஏழை மக்களை அழித்துவிடும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.
இதையும் படிக்க | 'உயிர் மூச்சு': இந்திய உதவிக்கு நன்றி கூறும் ரணில் விக்ரமசிங்கே
இலவசங்களை ஒழிக்க வேண்டும் என கடந்த சில தினங்களுக்கு முன்பாக பிரதமர் மோடி பேசியிருந்த நிலையில் இதுதொடர்பான விவாதம் கிளம்பியுள்ளது. கடந்த சில மாதங்களாக மத்திய பாஜக அரசுக்கு எதிராக சொந்தக் கட்சி எம்பியான வருண்காந்தி விமர்சனங்களைத் தெரிவித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.