புதுதில்லி: கல்லூரிகள், பல்கலைக்கழகங்களில் சேர்ந்த மாணவர்கள் அக்டோபர் 31 ஆம் தேதிக்குள் பாதியில் வெளியேறினால் 100% கட்டணத்தையும் திரும்ப வழங்க வேண்டும் என கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களுக்கு யுஜிசி உத்தரவிட்டுள்ளது.
பொதுநுழைவுத் தேர்வை எதிர்கொள்ளும் மாணவ, மாணவிகள் பலர், முன்னெச்சரிக்கையாக வேறு உயர்கல்வி நிறுவனங்களில் சேர்ந்துள்ளனர். மாணவர்களின் நலன் கருதியும், பெற்றோர்கள் எதிர்கொள்ளும் பணக் கஷ்டங்களை எண்ணத்தில் கொண்டு நாடு முழுவதும் உள்ள கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களுக்கு பல்கலைக்கழக மானியக்குழு (யுஜிசி) புதிய உத்தரவை பிறப்பித்துள்ளது.
அதில், ஏற்கனவே கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களில் சேர்ந்துள்ள மாணவர்கள் அக்டோபர் 31 ஆம் தேதிக்குள் பாதியிலேயே வெளியேறும் பட்சத்தில், அவர்கள் செலுத்திய முழு கட்டணத்தையும் திருப்பித்தர வேண்டும்.
இதையும் படிக்க | மேட்டூா் அணைக்கு நீா்வரத்து 1,40,000 கன அடியாக அதிகரிப்பு
மாணவர்கள் சேர்க்கையை ரத்து செய்தால் அவர்கள் செலுத்திய அனைத்து கட்டணத்தையும் முழுவதுமாக திருப்பி அளிக்க வேண்டும். சேர்கையை ரத்து செய்வதற்காக தனியாக கட்டணம் எதுவும் வசூலிக்கக் கூடாது.
டிசம்பர் 31, 2022 வரை சேர்க்கைகளை ரத்துசெய்தால், அந்த மாணவரிடமிருந்து வசூலித்த முழுக் கட்டணத்தில் செயலாக்கக் கட்டணமாக ரூ. 1000-க்கு மேல் கழித்துக்கொண்டு மீதத் தொகையை முழுமையாகத் திருப்பித் தர வேண்டும் எனவும், இதுதொடர்பான வழிமுறை உத்தரவை உறுதிசெய்யுமாறு அனைத்து கல்லூரி மற்றும் பல்கலைக்கழகங்களையும் யுஜிசி கேட்டுக் கொண்டுள்ளது.
இதையும் படிக்க | ஸ்டாலின் நகர்வுகள்; மோடியின் வியூகம்!
முன்னதாக, மாணவர்கள் வேறு கல்லூரிகளில் சேர்வதற்காக இடை நின்றால் கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள் சேர்க்கைக் கட்டணத்தை ரத்து செய்வதற்கு தனியாகக் கட்டணம் வசூலிக்கப்படுவதாக மாணவர்கள், பெற்றோக்கள் தரப்பில் புகார் எழுந்தது குறிப்பிடத்தக்கது.