தாமோ: மத்தியப் பிரதேச மாநிலம் தாமோ பகுதியில், மோட்டார்சைக்கிள் சாவிக்காக, தனது மகனின் கையை தந்தை கோடாரியால் வெட்ட, ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து இறந்துபோனார் 21 வயது மகன்.
இந்த விவகாரம் வியாழக்கிழமை இரவு நடந்துள்ளது. மோட்டி பட்டேல் (51) என்பவரும் அவரது மூத்த மகன் ராம் கிசானும் (24), வெளியே செல்வதற்காக இளைய மகனும், பலியான நபருமான சந்தோஷ் படேலிடம் இருசக்கர வாகனத்தின் சாவியைக் கேட்டுள்ளனர். ஆனால், சாவியைக் கொடுக்க சந்தோஷ் மறுத்துவிட்டதால், மோட்டியும் ராமும் சந்தோஷை தாக்கியுள்ளனர்.
ஆத்திரம் தலைக்கேறியதில், மோட்டி, தனது மகனின் கையை ஒரு கட்டை மீது வைத்து, கோடாரியால் வெட்டியதில், கை துண்டானது.
துண்டான கை மற்றும் கோடாரியுடன் அருகிலிருந்த காவல்நிலையத்தில் சரணடைந்தார் மோட்டி. சம்பவம் குறித்து அறிந்த காவல்துறையினர், உடனடியாக போபாய் கிராமத்துக்குச் சென்று ரத்த வெள்ளத்தில் கிடந்த சந்தோழை மீட்டு மாவட்ட மருத்துவமனைக்கும் பிறகு ஜபல்பூரில் உள்ள மருத்துவமனைக்கும் அழைத்துச் சென்றனர்.
ஆனால், மருத்துவமனைக்குச் செல்லும் வழியிலேயே ரத்த இழப்பால் சந்தோஷ் மரணமடைந்துவிட்டார். இதையடுத்து மோட்டி மற்றும் ராம் கைது செய்யப்பட்டுள்ளனர்.