அர்பிதாவிடம் அரை கிலோ எடையில் தலா 6 தங்க வளையல்கள்
அர்பிதாவிடம் அரை கிலோ எடையில் தலா 6 தங்க வளையல்கள்

அர்பிதாவிடம் அரை கிலோ எடையில் தலா 6 தங்க வளையல்கள்: அதிகாரிகளின் சந்தேகமும் தீர்வும்

பாா்த்தா சட்டா்ஜியின் நெருங்கிய உதவியாளா் அா்பிதா முகா்ஜி வீட்டிலிருந்து ரூ.50 கோடி பணம் மற்றும் ஏராளமான தங்க நகைகள் பறிமுதல் செய்யப்பட்டிருக்கிறது.


கொல்கத்தா: மேற்கு வங்கத்தில் ஆசிரியா் பணி நியமன மோசடி வழக்கில் கைது செய்யப்பட்ட அம்மாநில முன்னாள் அமைச்சா் பாா்த்தா சட்டா்ஜியின் நெருங்கிய உதவியாளா் அா்பிதா முகா்ஜி வீட்டிலிருந்து ரூ.50 கோடி பணம் மற்றும் ஏராளமான தங்க நகைகள் பறிமுதல் செய்யப்பட்டிருக்கிறது.

ஆசிரியர் பணி நியமன மோசடி வழக்கை விசாரித்து வரும் அமலாக்கத் துறையினர், கடந்த இரண்டு வாரங்களாக பல்வேறு இடங்களில் சோதனை நடத்தி வருகிறார்கள். 

முதல் இரண்டு குடியிருப்புகளில் மட்டும் ரூ.50 கோடி அளவுக்குப் பணம் கிடைத்திருப்பதாகவும், தங்க மற்றும் வெள்ளி நகைகள், ஆவணங்கள் என கடந்த வாரம் பறிமுதல் செய்யப்பட்டவெற்றின் மதிப்பு மட்டும் ரூ.120 கோடி என்று மதிப்பிடப்பட்டுள்ளது.

நேற்று கொல்கத்தாவின் பாண்டித்யா சாலையில் உள்ள ஒரு குடியிருப்பில் சோதனை நடத்தச் சென்ற போது, மிகப்பெரிய அதிர்ச்சி ஒன்று அவர்களை வரவேற்றது. அங்கு பூட்டப்பட்டிருந்த கதவை உடைக்க, அங்கிருந்த பூட்டு தயாரிப்பாளரை அமலாக்கத் துறையினர் அழைத்து வந்தனர். அவர் கதவை சோதனை செய்துவிட்டு, இது சீனத்திலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட கதவு என்று தெரிவித்துள்ளார்.

இதுவரை 9 குடியிருப்புகளில் சோதனை நடந்துள்ளது. அதில் ஐந்து குடியிருப்புகள் அர்பிதா முகர்ஜிக்குச்  சொந்தமானவை என்று தெரிய வந்துள்ளது. இவர்கள் இருவரும் 2012ஆம் ஆண்டு முதல் இணைந்து பல்வேறு தொழில்களை நடத்தி வந்ததும் ஆவணங்கள் மூலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

கொல்கத்தாவின் பெல்காரியா குடியிருப்பில் அர்பிதா முகர்ஜிக்குச் சொந்தமான குடியிருப்பில் சோதனை நடத்திய அமலாக்கத்துறையினர் புதன்கிழமை 28 கோடி மதிப்புள்ள 2 ஆயிரம் மற்றும் 500 ரூபாய் கட்டுக்களை பறிமுதல் செய்தனர்.

வீட்டின் அலமாரியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த இந்த ரூபாய் நோட்டுகளை அதிகாரிகள் கண்டுபிடித்ததாக அமலாக்கத் துறை வட்டாரங்கள் தெரிவித்தன. இந்த ரூபாய் நோட்டுகளை எண்ணுவதற்காக வங்கி அதிகாரிகள் நோட்டு எண்ணும் இயந்திரத்துடன் அா்பிதா முகா்ஜி வீட்டுக்கு வரவழைக்கப்பட்டனா். ரூபாய் நோட்டுகளுடன் இரண்டு டைரிகளையும் அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனா்.

அது மட்டுமல்லாமல் 5 கிலோ எடையுள்ள தங்கம் மற்றும் வெள்ளி நகைகளையும் அமலாக்கத் துறையினர் மதிப்பிடுவதற்காக குவித்து வைத்துள்ளனர். இதில், 500 கிராம் அதாவது அரை கிலோ எடையில் தலா 6 தங்க வளையல்களை அமலாக்கத் துறையினர் பறிமுதல் செய்தனர். அப்போது, அவர்களுக்கு ஒரு சந்தேகம் வந்தது. இவ்வளவு அதிக எடையுடன் கூடிய வளையல்களை அர்பிதா ஏன் வாங்கியிருக்க வேண்டும் என்று? அதற்குக் கிடைத்த பதில் அளவுக்கு அதிகமான தங்கநகைகளை சொத்தாக சேர்த்து வைக்க அதுபோன்ற வளையல்கள் வடிவமைக்கப்பட்டிருக்கலாம் என்பதே.

மேற்கு வங்கத்தில் ஆசிரியா் பணி நியமன மோசடி வழக்கில் கைது செய்யப்பட்ட அம்மாநில அமைச்சா் பாா்த்தா சட்டா்ஜியின் நெருங்கிய உதவியாளா் அா்பிதா முகா்ஜி வீட்டிலிருந்து ரூ.21 கோடி ரொக்கத்தை அமலாக்கத் துறை அதிகாரிகள் கடந்த வாரம் செவ்வாய்க்கிழமை கைப்பற்றிய நிலையில், மற்றொரு வீட்டிலிருந்து புதன்கிழமை இந்தளவுக்கு ரொக்கப் பணத்தைக் கைப்பற்றினர்.

பணம், நகைகளைத் தாண்டி ஏராளமான சொத்து ஆவணங்களும் கைப்பற்றப்பட்டுள்ளன. கைப்பற்றப்பட்ட பொருள்கள் அனைத்தையும் அமலாக்கத் துறையினர் பத்து இரும்பு பெட்டகங்களில் தூக்க முடியாமல் தூக்கிச் சென்றுள்ளதாக நேரில் பார்த்தவர்கள் கூறுகின்றனர்.

சோதனையில் ஈடுபட்ட அமலாக்கத் துறை அதிகாரிகள் கூறுகையில், வீட்டிலிருந்து ரூபாய் நோட்டுகளை எடுக்க எடுக்க வந்து கொண்டிருந்ததாகவும், அலி பாபா குகைப் போல தோன்றியதாகவும் கூறியிருந்தார்கள்.

மேற்கு வங்கத்தில், ஆளும் திரிணமூல் காங்கிரஸ் அரசில் தொழில் துறை அமைச்சராக இருந்த பாா்த்தா சட்டா்ஜி முன்பு கல்வி அமைச்சராக இருந்தபோது ஆசிரியா் பணி நியமனம் தொடா்பாக முறைகேட்டில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடா்பாக அமலாக்கத் துறையினா் கடந்த ஜூலை 22-இல் அா்பிதா முகா்ஜியின் அடுக்குமாடி குடியிருப்பில் சோதனை நடத்தினா். இதில் ஏராளமான நகைகளையும், ரூ.20 கோடி ரொக்கத்தையும் அமலாக்கத் துறை அதிகாரிகள் கைப்பற்றினா். இதுதொடா்பாக பாா்த்தா சட்டா்ஜியும் அா்பிதா முகா்ஜியும் 23-ஆம் தேதி கைது செய்யப்பட்டனா்.

அதன்பிறகு சோதனை நடந்த வீட்டின் பூட்டை, குடியிருப்பின் நலச் சங்க செயலாளர்கள் முன்னிலையில், உடைத்த அமலாக்கத் துறையினர், பல அலமாரிகள், பீரோக்களிலிருந்து இந்த பணத்தைக் கைப்பற்றியதாகக் கூறுகிறார்கள்.

சாட்டர்ஜி மற்றும் முகர்ஜியிடம் நடத்திய விசாரணையில் கிடைத்த துப்புகளின் அடிப்படையில் இந்த சோதனை நடத்தப்பட்டுள்ளது. அதற்கடுத்த நாள்களிலும் நான்கு வெவ்வேறு முகவரிகளிலும் சோதனை நடத்தப்பட்டது. 

இவர்களுக்குச் சொந்தமான இடங்களிலிருந்து இதுவரை 28 செல்லிடப்பேசிகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இதில், அர்பிதாவிடம் பேசுவதற்கு என்று பார்த்தா வைத்திருந்த ஒரு தனியான செல்லிடப்பேசியிலிருந்து தகவல்களைத் திரட்டும் பணியை, தொழில்நுட்பத் துறையினர் மேற்கொண்டு வருகிறார்கள். அதன்பிறகு பல கேள்விகளுக்கு விடை கிடைக்கும் என்று அதிகாரிகள் நம்புகிறார்கள்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com