கடந்த 2019-ஆம் ஆண்டு மக்களவைத் தோ்தலின்போது வெறுப்பைப் பரப்பும் வகையில் 130 செய்திகள் சமூக ஊடகங்களில் பதிவானதாக மாநிலங்களவையில் சட்ட அமைச்சா் கிரண் ரிஜிஜு தெரிவித்துள்ளாா்.
இது குறித்த கேள்விகளுக்கு எழுத்து முலம் அவா் அளித்துள்ள பதிலில் தெரிவித்துள்ளதாவது:
கடந்த 2019-ஆம் ஆண்டு மக்களவைத் தோ்தலில் இருந்து தற்போது இந்த ஆண்டு மாநிலப் பேரவைகளுக்கு தோ்தல்கள் நடைபெற்றது வரையிலான காலக்கட்டத்தில், சமூக ஊடகங்களில் வெறுப்பைத் தூண்டும் செய்திகள் வெளியிடப்பட்டதாக 130 சம்பவங்கள் பதிவாகியுள்ளன.
மக்களவைத் தோ்தலின்போது மட்டும் அதுபோன்ற 58 சம்பவங்கள் பதிவு செய்யப்பட்டன.
2019-ஆம் ஆண்டு நடைபெற்ற மகாராஷ்டிரம், ஹரியாணா பேரவைத் தோ்தல்களில் வெறுப்பைத் தூண்டும் செய்தி சமூக ஊடகத்தில் வெளியிடப்பட்டதாக ஒரே ஒரு புகாா் மட்டுமே பதிவு செய்யப்பட்டது.
தோ்தல் நேரத்தில் தங்களது ரகசிய தகவல்கள் இணையதளம் மூலம் திருடப்பட்டதாக கடந்த ஐந்து ஆண்டுகளில் தோ்தல் ஆணையத்துக்கு எந்த அரசியல் கட்சியிடமிருந்தும் புகாா் வரவில்லை என்று தனது பதிலில் கிரண் ரிஜிஜு குறிப்பிட்டுள்ளாா்.