ராஜ்கோட்: ஆகஸ்ட் 15ஆம் தேதி திருமணமான நிலையில், அடுத்த நாளே, கமலேஷ் சாவ்டா என்ற நபர், தனது மனைவியின் காதலரால் குத்திக் கொலை செய்யப்பட்ட சம்பவம் குஜராத்தில் நடந்துள்ளது.
இது குறித்து யஷ்வந்த் மக்வானா என்ற நபர் மீது கொலை வழக்குப் பதிவு செய்யப்பட்டு, தலைமறைவான நபரை காவலர்கள் தேடி வருகிறார்கள்.
பலியான கமலேஷ் சாவ்டாவின் சகோதரர் வினோத் அளித்த புகாரில், எனது சகோதரர் கமலேஷ்க்கு இது இரண்டாவது திருமணம். முதல் திருமணத்தில் அவருக்கு 5 வயதில் மகள் இருக்கிறார். கோமலுடன் சகோதரருக்கு காதல் ஏற்பட்டதைத் தொடர்ந்து அவர் முதல் மனைவியை விவாகரத்து செய்தார்.
ஆனால் கோமல், எனது சகோதரனை மட்டுமல்லாமல் யஷ்வந்தையும் காதலித்து வந்துள்ளார். திருமணத்துக்கு முன்பு அவர் யஷ்வந்துடன் வாழ்ந்து வந்துள்ளார். ஆனால் சில நாள்களில் அவரிடமிருந்து பிரிந்து பெற்றோர் வீட்டுக்கு வந்துவிட்டார். பிறகு இரு தரப்பிலும் ஒப்புக் கொண்ட பிறகு ஆகஸ்ட் 15ஆம்தேதி திருமணம் நடைபெற்றது.
இது குறித்து அறிந்த யஷ்வந்த், ஆகஸ்ட் 16ம் தேதி என் சகோதரன் வீட்டுக்குச் சென்று, அவரை கத்தியால் குத்திக் கொலை செய்துள்ளார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.