புதிய தேசியக் கல்விக் கொள்கையை கொண்டு வருவதன் மூலம் மாபெரும் இந்தியாவை உருவாக்குவதற்கான விதைகளை பிரதமர் மோடி தூவியுள்ளார் என அமித்ஷா பேசியுள்ளார்.
மத்திய உள்துறை அமைச்சர் அமித ஷா போபாலில் குஷாபு தாக்ரேவின் 100வது பிறந்தநாள் விழாவிற்கு சென்றிருந்த போது பேசியதாவது:
பிறவி திறமைகள் வெளிக்கொணரப்படும். புதிய தேசியக் கல்விக் கொள்கையை கொண்டு வருவதன் மூலம் மாபெரும் இந்தியாவை உருவாக்குவதற்கான விதைகளை பிரதமர் மோடி தூவியுள்ளார். இது 2024-க்குள் வளர்ந்து மிகப்பெரிய ஆலமரமாக மாறும். இந்தியாவை மட்டுமல்லாமல் உலகம் முழுவதும் வழி நடத்தும். வரலாற்றில் இந்தியா எப்படி உயர்நிலைக் கல்வியில் இருந்ததோ அப்படி மாறும்.
குழந்தைகள் தாய் மொழியில் படிக்கும் போது அவர்களால் சரியாக சிந்திக்க முடியும். வெளிநாட்டு மொழியில் சிந்திக்க சிரமமாக இருக்கும். பிரதமர் மோடி வெளிநாட்டில் உலக மக்களின் முன்னிலையில் ஹிந்தியில் சரளமாக பேசுகிறார். ஒட்டுமொத்த உலகமும் அவரது பேச்சைக்கேட்கிறது.
சிறந்த நாடு என்பது ஆறுகளாலும், மலைகளாலும் மட்டும் உருவக்கப்படுவதில்லை. சிறந்த மனிதர்களால்தான் உருவாக்கப்படுகிறது. அதனால்தான் குழந்தைகளுக்கு சிறந்த கல்வியை வழங்க நினைக்கிறோம். ஆங்கிலேயர்களது கல்வி வேலைவாய்ப்புக்கு மட்டுமே உதவும். ஆனால் நம்முடைய பழங்கால கல்வி மனதினை உறுதி செய்யும். சரியான பாதையில் செலுத்தும்.