தில்லியில் ஆம் ஆத்மியைச் சேர்ந்த அமைச்சர்களுக்கு எதிரான சிபிஐ சோதனைகள் அனைத்தும் குஜராத் தேர்தலை மனதில் வைத்தே நடத்தப்படுவதாக அரவிந்த் கேஜரிவால் குற்றம்சாட்டியுள்ளார்.
தில்லி சட்டப்பேரவை சிறப்புக் கூட்டத்தில் பேசிய அவர் இதனை தெரிவித்தார். பிரதமர் நரேந்திர மோடியையும் அவர் தாக்கிப் பேசினார்.
சட்டப்பேரவை சிறப்புக் கூட்டத்தில் அரவிந்த் கேஜரிவால் பேசியதாவது: “ தில்லி சட்டப்பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தவும் நாங்கள் தயாராக உள்ளோம். குஜராத் மாநிலத்தில் பாஜகவின் கோட்டை ஆபத்தில் உள்ளது. அமலாக்கத் துறை மற்றும் சிபிஐ சோதனைகள் அனைத்தும் எதிர்வரும் குஜராத் தேர்தலை மையமாக வைத்து நடத்தப்படுவதாகும். தில்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியா வீட்டில் நடைபெற்ற சோதனையில் சிபிஐ அதிகாரிகளால் ஒன்றும் கைப்பற்றப்படவில்லை.
தில்லி அரசினைக் கவிழ்ப்பதே பாஜகவின் நோக்கமாக உள்ளது. அவர்கள் மணிப்பூர், கோவா, மத்தியப் பிரதேசம், பிகார், அருணாச்சலப் பிரதேசம், மகாராஷ்டிர அரசுகளை திட்டமிட்டு கவிழ்த்துள்ளனர். தொடர் கொலையாளியைப் போல் பாஜக செயல்பட்டு வருகிறது. சரக்கு மற்றும் சேவைகள் வரி மற்றும் எரிபொருள்களின் மீதான வரியைப் பயன்படுத்தி சட்டமன்ற உறுப்பினர்களை பாஜக விலைக்கு வாங்க நினைக்கிறது. நாடு முழுவதும் பாஜக இதுவரை 277 சட்டமன்ற உறுப்பினர்களை விலைக்கு வாங்கியுள்ளது. தற்போது தில்லி துணைநிலை ஆளுநர் பள்ளிகளில் விசாரணையைத் தொடங்கியுள்ளார். அவர்கள் பள்ளி மற்றும் மருத்துவமனைகளில் செயல்படுத்தப்படும் சேவைகளை தடுக்க நினைக்கிறார்கள் என்றார்.”