ராகுல்காந்தி முதிர்ச்சி இல்லாத தலைவர் என அசாம் முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மா கருத்துத் தெரிவித்துள்ளார்.
காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரும், முன்னாள் மத்திய அமைச்சரும், ஜம்மு - காஷ்மீர் மாநில முன்னாள் முதல்வருமான குலாம் நபி ஆசாத் காங்கிரஸிலிருந்து விலகுவதாக இன்று அறிவித்துள்ளார்.
இது காங்கிரஸ் கட்சிக்கு மிகப்பெரிய பின்னடைவாகப் பார்க்கப்படுகிறது.
மேலும்,காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகியிருக்கும் குலாம் நபி ஆசாத், ராகுல் காந்தி மீது காரசார குற்றச்சாட்டுகளை முன் வைத்துள்ளார். அதாவது, காங்கிரஸ் கட்சியின் முக்கிய முடிவுகள் அனைத்தும் ராகுல் அல்லது அவரது உதவியாளர்களாலேயே எடுக்கப்படுகிறது. காங்கிரஸ் கட்சியில் இருந்த கலந்தாலோசனை முறையை முற்றிலும் ராகுல் ஒழித்துவிட்டார்.
கடந்த 2014ஆம் ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி பெற்ற தோல்விக்கு ராகுல் காந்தியின் குழந்தைத் தனமான நடவடிக்கையே காரணம். காங்கிரஸ் கட்சியில் சோனியா காந்தி பெயரளவில் மட்டுமே தலைவராக இருக்கிறார் என்றும் குற்றம்சாட்டியுள்ளார்.
இந்நிலையில், ஆசாத்தின் விலகல் குறித்து அசாம் முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மாவிடம் பத்திரிகையாளர்கள் கேள்வியெழுப்பினர். இதற்கு பிஸ்வா ‘2015 ஆம் ஆண்டு நான் எழுதியக் கடித்தத்திற்கும் குலாம் நபி ஆசாத் எழுதியதற்கும் நிறைய ஒற்றுமைகள் இருப்பதைப் பார்க்கலாம். காங்கிரஸ் கட்சியில் ராகுல் காந்தி முதிர்ச்சியற்றவர் என்பது அனைவருக்கும் தெரியும். சோனியா காந்தி கட்சியை கவனித்துக் கொள்ளவில்லை, அவர் தனது மகனை மேம்படுத்த முயற்சிக்கிறார். இது வீண் முயற்சி’ என கருத்துத் தெரிவித்துள்ளார்.
கடந்த 2015 ஆம் ஆண்டு அசாம் முதல்வராக இருந்த தருண் கோகாயுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் ஹிமந்தா பிஸ்வா சர்மா காங்கிரஸிலிருந்து விலகி பாஜகவில் இணைந்தது குறிப்பிடத்தக்கது.