கடந்த இரண்டரை ஆண்டுகளில் இந்தியத் தொழிலதிபர் அதானியின் சொத்து மதிப்பு 13 முறை உயர்ந்துள்ளது.
அதானி குழுமத்தின் நிறுவனர் கௌதம் அதானி வேகமான வளர்ச்சி கொண்ட தொழிலதிபராக உள்ளார். சில தினங்களுக்கு முன்பாக ப்ளூம்பெர்க் பில்லியனர்ஸ் இண்டெக்ஸ் வெளியிட்ட உலக பணக்காரர்கள் பட்டியலில் கெளதம் அதானி 137.4 பில்லியன் டாலர்கள் (இந்திய மதிப்பில் ரூ.10.8 லட்சம் கோடி) சொத்து மதிப்புடன் 3ஆவது இடத்தைப் பிடித்துள்ளார்.
கடந்த 2020ஆம் ஆண்டு 10 பில்லியன் அமெரிக்க டாலர்களாக இருந்த அதானியின் சொத்து மதிப்பு வேகமாக உயர்ந்து 2022ஆம் ஆண்டு 60 பில்லியன் அமெரிக்க டாலர்களானது. கிட்டத்தட்ட இரண்டரை ஆண்டுகளில் 13 முறை அதானியின் சொத்து மதிப்புகள் உயர்ந்துள்ளன. இதன்மூலம் குறுகிய காலத்தில் மிக வேகமாக சொத்துக்களை அதிகரித்த பெரும் பணக்காரர்களின் பட்டியலிலும் அதானி முன்னிலையில் உள்ளார்.
உலக பணக்காரர்கள் பட்டியலில் எலான் மஸ்க் (ரூ. 20 லட்சம் கோடி) முதலிடத்திலும் அமேசான் நிறுவனர் ஜெஃப் ஃபேசோஸ் (ரூ. 12.4 லட்சம் கோடி) 2-வது மற்றும் எல்விஎம்எச் நிர்வாக இயக்குநர் பெர்னார்ட் அர்னால்ட் (10.6 லட்சம் கோடி) 4-வது இடத்திலும் உள்ளனர்.
இதையும் படிக்க | சிறுநீரைக் குடிக்கவைத்த பாஜக தலைவர்: 12 நாள்கள் போலீஸ் காவல்
மைக்ரோசாஃப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் 111.4 பில்லியன் (ரூ. 8.9 லட்சம் கோடி) சொத்து மதிப்பில் 5-வது இடத்தில் உள்ளார். ரிலையன்ஸ் குழுமத்தின் தலைவர் முகேஷ் அம்பானி 7.4 லட்சம் கோடியுடன் 10 ஆம் இடத்திலிருந்து 11-வது இடத்திற்குப் பின்னடைந்துள்ளார்.