கேரளத்தில் மருத்துவமனை ஊழியரின் 13 வயது மகன், ஆம்புலன்ஸை திருடி ஓட்டிச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கேரள மாநிலம் திரிச்சூர் பகுதியில் செயல்பட்டு வரும் அரசு மருத்துவமனையில் ஆம்புலன்ஸ் திருடுபோன சம்பவம் அரங்கேறியுள்ளது.
அதில், ஆச்சரியம் என்னவென்றால், அதனைத் திருடியது 13 வயது சிறுவன் என அம்மாநில காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.
திரிச்சூர் அரசு மருத்துவமனையின் ஊழியராக பணிபுரிந்து வருபவரின் 13 வயது மகன், கடந்த ஒரு வாரமாக உடல்நிலை சரியில்லாததால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளான். காய்ச்சல் மற்றும் குறைந்த ரத்த அளவு காரணமாக சிகிச்சை பெற்று வந்த சிறுவன், இன்று ஆம்புலன்ஸை எடுத்து ஓட்டிச் சென்றுள்ளான்.
ஆம்புலன்ஸ் ஓட்டுநரும் சாவியை வாகனத்திலேயே விட்டு, தண்ணீர் பிடிக்கச் சென்றதாக காவல் துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆம்புலன்ஸ் திருடுபோனதாக ஓட்டுநர் தரப்பிலிருந்து காவல் நிலையத்தில் புகாரளிக்கப்பட்டுள்ளது.
புகாரின்பேரில் காவல் துறையினர் ஆம்புலன்ஸ் வாகனத்தை ஜிபிஎஸ் மூலம் கண்டறிந்து ஆம்புலன்ஸை மீட்டனர். இதனிடையே மருத்துவமனை ஆம்புலன்ஸ் வாகனத்தை சிறுவன் ஓட்டிச்செல்வதைக் கண்ட பொதுமக்கள், வாகனத்தை விரட்டிச்சென்று பிடித்தனர். சுமார் 8 கிலோ மீட்டர் தூரத்துக்கு சிறுவன் ஆம்புலன்ஸ் வாகனத்தை இயக்கியுள்ளார்.
மருத்துவமனையில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த ஆம்புலன்ஸை சிறுவன் ஓட்டிச்சென்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.