காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியின் 100வது நாள் ஒற்றுமை நடைப்பயணத்த்தில் ஹிமாசல் முதல்வர் சுக்விந்தர் சிங் சுகு, துணை முதல்வர் முகேஷ் அக்னிஹோத்ரி மற்றும் ஹிமாசல் காங்கிரஸ் தலைவர் பிரதீபா சிங் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இந்த 100வது நாள் நடைப்பயணத்தில் ஹிமாசல் முதல்வர், துணை முதல்வர் மட்டுமல்லாது காங்கிரஸ் முக்கியப் பிரமுகர்கள் பலரும் கலந்து கொண்டனர்.
இதையும் படிக்க: இயக்குநர் அட்லி வீட்டில் விசேஷம்!
வரும் 2024 மக்களவை தேர்தலையொட்டி, நாடு முழுவதும் உள்ள மக்களை ஒன்றிணைக்கும் வகையில் இந்திய ஒற்றுமை நடைப்பயணத்தை(பாரத் ஜோடோ யாத்ரா) காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி மேற்கொண்டு வருகிறார்.
தமிழகத்தின் கன்னியாகுமரி மாவட்டத்தில் செப்டம்பர் 7ஆம் தேதி தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கொடியசைத்து இந்த நடைப்பயணத்தை தொடங்கி வைத்தார். கேரளம், ஆந்திரம், தெலங்கானா, மகாராஷ்டிரம், மத்திய பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களைக் கடந்து ராஜஸ்தானில் நடைப்பயணம் நடைபெற்று வருகின்றது.
ராஜஸ்தானில் இன்று தனது 100 -வது நடைப்பயணத்தை மேற்கொண்டு வருகிறார் ராகுல் காந்தி.
பெரிய அளவிலான மக்கள் கூட்டம் ராஜஸ்தானின் தௌசா பகுதியில் கூடியிருந்தனர். ஒற்றுமை நடைப்பயணத்தில் கலந்து கொள்பவர்களை ஆதரிக்கும் விதமாக வழி நெடுகிலும் மக்கள் கூடியிருந்தனர். தௌசா தொகுதி சச்சின் பைலட்டின் நாடாளுமன்றத் தொகுதியாகும். ராகுல் காந்தியுடன் சச்சின் பைலட் நடைப்பயணத்தில் ஈடுபட்டிருக்கும்போது அவரது ஆதரவாளர்கள் அவருக்கு ஆதரவாக முழக்கமிட்டனர். சிறிது தூரம் சென்ற இந்த நடைப்பயணத்தில் ஹிமாசலின் புதிய முதல்வராக தேர்ந்தெடுக்கப்பட்ட சுக்விந்தர் சிங் சுகு மற்றும் துணை முதல்வர் முகேஷ் அக்னிஹோத்ரி ஆகியோர் நடைப்பயணத்தில் ராகுல் காந்தியுடன் இணைந்து கொண்டனர்.
இந்த நடைப்பயணமானது மொத்தம் 3,570 கிலோ மீட்டர் கடந்து 150-வது நாளில் காஷ்மீரை அடைய உள்ளது குறிப்பிடத்தக்கது.