தில்லியில் உள்ள பள்ளியில் ஐந்தாம் வகுப்பு படித்துவந்த மாணவியை, முதல் தளத்தில் இருந்து வகுப்பறையின் ஜன்னல் வழியாக ஆசிரியை தூக்கி வீசியதில், அவர் பலத்த காயமடைந்தார்.
இந்த சம்பவத்தில் தொடர்புடைய ஆசிரியை கைது செய்யப்பட்டு, கொலை முயற்சி வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
வெள்ளிக்கிழமை முற்பகல் 11.15 மணியளவில், பள்ளியின் வகுப்பறை ஜன்னல் வழியாக, மாணவி தூக்கி வீசப்பட்டதாக காவல்துறையினருக்குத் தகவல் கிடைத்தது.
உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மாணவிக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. அவர் அபாயக் கட்டத்தைத் தாண்டிவிட்டதாகவும், தற்போது உயிருக்கு ஆபத்தில்லை என்றும், சிகிச்சை தொடர்ந்து அளிக்கப்பட்டு வருவதாகவும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
வகுப்பறையில் என்ன நடந்தது என்பது குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகிறார்கள். ஆசிரியை கீதா தேஷ்வால் உடனடியாகக் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.