உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாக சந்திரசூட் பொறுப்பேற்றதில் இருந்து இதுவரை 6,844 வழக்குகள் முடித்து வைக்கப்பட்டுள்ளது.
உச்சநீதிமன்றத்தின் 50-ஆவது தலைமை நீதிபதியாக கடந்த நவம்பர் 9ஆம் தேதி சந்திரசூட் பொறுபேற்றார். அவர் பொறுப்பேற்ற பிறகு புதிதாக 5,898 வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து உச்சநீதிமன்றம் வெளியிட்டுள்ள செய்தியில், கடந்த நவம்பர் 9ஆம் தேதி முதல் டிசம்பர் 16 வரை 6,844 வழக்குகள் முடித்து வைக்கப்பட்டுள்ளது. புதிதாக 5,898 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. மொத்தம் 2,511 இடமாற்றம் மற்றும் ஜாமீன் வழக்குகள் முடித்து வைக்கப்பட்டுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தலைமை நீதிபதியாக பொறுப்பேற்ற சந்திரசூட், ஜாமீன் மற்றும் இடமாற்றம் போன்ற தனிப்பட்ட சுதந்திரம் சம்பந்தப்பட்ட வழக்குகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என்று அறிவித்திருந்தார்.
உச்ச நீதிமன்றத்தில் உள்ள ஒவ்வொரு அமர்வுகளிலும் வாரத்தில் ஒரு நாளில் 10 ஜாமீன் வழக்குகள் மற்றும் 10 இடமாற்ற மனுக்கள் விசாரிக்கப்படும் என்றும் அவர் கூறியிருந்தார்.
ஒரு மாநிலத்திற்குள் அல்லது பிற மாநிலத்திற்கிடையே ஒரு நீதிமன்றத்திலிருந்து மற்றொரு நீதிமன்றத்திற்கு வழக்குகளை மாற்றும் அதிகாரம் உச்சநீதிமன்றத்திற்கு மட்டுமே உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இதற்கிடையே, அதிக வழக்குகள் நிலுவையில் இருக்கும் நேரத்தில் ஜாமீன் மற்றும் தேவையற்ற பொதுநல வழக்குகளை உச்சநீதிமன்றம் விசாரணைக்கு எடுக்கக் கூடாது என்று மாநிலங்களவையில் சட்டம் மற்றும் நீதித்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு குறிப்பிட்டிருந்தார்.
இதற்கு கடந்த வெள்ளிக்கிழமை பதிலளித்த தலைமை நீதிபதி, "தனிமனித சுதந்திரம் தொடர்பான விஷயங்களில் உச்ச நீதிமன்றம் தலையிடாவிட்டால், நாங்கள் எதற்காக இங்கு இருக்கிறோம்? குடிமக்களின் சுதந்திரத்திற்கான கூக்குரலுக்கு பதிலளிக்கதான் நாங்கள் இங்கு இருக்கிறோம்" என்று குறிப்பிட்டார்.