ராகுல் காந்தியின் ஒற்றுமை நடைப்பயணம் ஹரியாணாவில் இருந்து இன்று தில்லிக்குள் நுழைந்தது.
வரும் 2024 மக்களவை தேர்தலையொட்டி, நாடு முழுவதும் உள்ள மக்களை ஒன்றிணைக்கும் வகையில் இந்திய ஒற்றுமை நடைப்பயணத்தை(பாரத் ஜோடோ யாத்ரா) காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி மேற்கொண்டு வருகிறார்.
தமிழகத்தின் கன்னியாகுமரி மாவட்டத்தில் செப்டம்பர் 7ல் தொடங்கிய பயணம் கேரளம், ஆந்திரம், தெலங்கானா, மகாராஷ்டிரம், மத்திய பிரதேசம், ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களைத் தொடர்ந்து இன்று தலைநகர் தில்லிக்குள் நுழைந்தது.
இன்று காலை ஹரியாணாவின் பரிதாபாத் நகரில் இருந்து தில்லிக்குள் நுழைந்தது. இதில் ஆயிரக்கணக்கானோர் ராகுலுடன் நடைப்பயணம் மேற்கொண்டனர். காங்கிரஸ் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர்கள் பலரும் இதில் கலந்துகொள்கின்றனர். தமிழகத்தில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் கலந்துகொள்கிறார். இன்றைய நடைப்பயணம் தில்லி செங்கோட்டை பகுதியில் முடிவடைகிறது. பின்னர் ஒரு வார காலம் இடைவெளிக்குப் பிறகு மீண்டும் தில்லியில் தொடங்கி ஹிமாசல் வழியாக ஜம்மு-காஷ்மீரில் முடிவடைகிறது.
தில்லியில் நடைப்பயணம் மேற்கொள்ளப்படுவதையடுத்து கலாசார நடனங்கள் உள்ளிட்ட கொண்டாட்டங்களும் நடைபெற்று வருகின்றன.
பல முக்கிய பிரமுகர்கள், அரசியல் தலைவர்கள் பலரும் நேரில் சென்று அவரது நடைப்பயணத்துக்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர். செல்லும் வழியில் அவ்வப்போது அவர் மக்களிடையே கலந்துரையாடி வருகிறார்.