பல நாடுகளிலும் கரோனா பரவல் அதிகரித்து வருவதால் மக்கள் அனைவரும் கரோனாவுக்கு எதிரான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு விழிப்புடன் இருக்க வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
இந்த ஆண்டின் கடைசி மனதின் குரல் வானொலி நிகழ்ச்சியின் மூலம் நாட்டு மக்களுக்கு உரையாற்றிய அவர் இதனை தெரிவித்தார்.
இதையும் படிக்க: துணிவு படத்தின் ‘கேங்ஸ்டா’ பாடல் ரிலீஸ் எப்போது?
இது குறித்து மனதின் குரல் நிகழ்ச்சியில் பிரதமர் பேசியதாவது: மக்கள் கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு விடுமுறையைக் கொண்டாட வெளியில் சென்று மகிழ்வர். கரோனா பரவல் அதிகரித்து வருவதால் அவர்கள் முகக் கவசம் அணிவது, கைகளை அடிக்கடி சுத்தம் செய்வது போன்ற வழிமுறைகளை முறையாக கடைபிடிக்க வேண்டும். அவர்களது விடுமுறைக் கொண்டாட்டம் கரோனா வைரஸினால் பாதிக்கப்படாமல் இருப்பதை அவர்கள் உறுதி செய்து கொள்ள வேண்டும். கரோனா பரவல் அதிகரித்து வருவதால் மத்திய அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. உலகில் கரோனா வேகமாக பரவி வருகிறது. குறிப்பாக, சீனாவில் அவர்களது பூஜ்ஜிய கரோனா திட்டத்தை தளர்த்திய பிறகு அங்கு நோய்ப் பரவல் அதிகரித்துள்ளது.
இந்த 2022 ஆம் ஆண்டு இந்தியாவுக்கு பல வகையில் ஊக்கமளிப்பதாக அமைந்துள்ளது. இந்தியா உலக அரங்கில் சிறப்பான இடத்தைப் பிடித்துள்ளது. இந்தியாவில் 220 கோடிக்கும் அதிகமான கரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன. உலகில் 5-வது பெரிய பொருளாதார நாடாக இந்தியா உருவாகியுள்ளது. ஏற்றுமதியில் இந்தியா 400 பில்லியன் அமெரிக்க டாலர்களைத் தொட்டுள்ளது. விண்வெளித் துறை , பாதுகாப்புத் துறை, டிரோன்கள் மற்றும் விளையாட்டுத் துறையில் இந்தியா பல்வேறு சாதனைகளை படைத்துள்ளது என்றார்.