மத்திய பிரதேச சட்டப்பேரவை உறுப்பினரின் அதிகாரப்பூர்வ குடியிருப்பில் கல்லூரி மாணவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
போபாலில் காங்கிரஸ் சட்டப்பேரவை உறுப்பினர் ஓம்கார் சிங் மார்கமின் அதிகாரப்பூர்வ குடியிருப்பு உள்ளது. இதில், கடந்த 4 ஆண்டுகளாக தீரத் சிங் என்ற கல்லூரி மாணவர் தங்கி படித்து வருகிறார்.
இந்நிலையில், கடந்த சனிக்கிழமை தீரத் சிங் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக காவல்துறைக்கு தகவல் அளிக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு சென்ற காவல்துறையினர் மாணவரின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பியுள்ளனர்.
மாணவர் தற்கொலை செய்து கொண்ட அறையில் தற்கொலைக் குறிப்பையும் காவல்துறையினர் கைப்பற்றியுள்ளனர். அதில், புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளதால் தற்கொலை செய்து கொள்வதாக மாணவர் குறிப்பிடப்பட்டுள்ளதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து காவல்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், மாணவரின் பெற்றோரும் அவர் புற்றுநோயால் அவதிப்பட்டு வந்ததை உறுதி செய்துள்ளனர். மேலும், மாணவரின் தற்கொலைக்கான காரணங்கள் குறித்து அனைத்து கோணங்களிலும் விசாரணை நடத்தப்படும் என்றார்.
சட்டப்பேரவை உறுப்பினரும், முன்னாள் அமைச்சருமான ஓம்கார் சிங் அதிகாரப்பூர்வ குடியிருப்பில் மாணவர் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.