தனது சகோதரியின் திருமணத்திற்காக ஒரு வார கால ஜாமீனில் வெளிவந்திருந்த தில்லி பல்கலைக்கழக முன்னாள் மாணவர் உமர் காலித் திகார் சிறை திரும்பினார்.
கடந்த 2020ஆம் ஆண்டு வடகிழக்கு தில்லியில் குடியுரிமை சட்டத்திற்கு எதிராக நடந்த போராட்டத்தில் ஏற்பட்ட வன்முறை தொடா்பான வழக்கில் கைது செய்யப்பட்ட உமா் காலித் 2 வருட காலமாக சிறையில் அடைக்கப்பட்டிருந்தார்.
இந்நிலையில் தனது சகோதரியின் திருமணத்தில் பங்கேற்கும் வகையில், தனக்கு இரண்டு வார கால இடைக்கால ஜாமீன் வழங்க வேண்டும் என்று முன்னாள் மாணவா் தலைவரான உமா் காலித் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தாா். இதை பரிசீலித்த கூடுதல் செஷன்ஸ் நீதிபதி அமிதாப் ராவத், அவருக்கு ஒரு வார கால இடைக்கால ஜாமீன் அளித்து உத்தரவிட்டாா்.
இதையும் படிக்க | ‘பாஜகதான் எனக்கு குரு’: என்ன சொல்கிறார் ராகுல்காந்தி?
அதனைத் தொடர்ந்து கடந்த வெள்ளிக்கிழமை திகார் சிறையிலிருந்து வெளிவந்த உமர் காலித் ஒருவாரம் ஜாமீன் காலம் நிறைவடைந்த நிலையில் தனது சகோதரியின் திருமணத்தில் பங்கேற்றுவிட்டு திகார் சிறை திரும்பியுள்ளார்.
முன்னதாக, வடகிழக்கு தில்லியில் 2020ஆம் ஆண்டு பிப்ரவரியில் நிகழ்ந்த வன்முறை சம்பவத்தில் முக்கிய மூலையாக செயல்பட்டதாக இந்திய தண்டனைச் சட்டத்தின் பிரிவுகள் மற்றும் சட்ட விரோத நடவடிக்கைகள் தடுப்பு சட்டத்தின் கீழ் உமா் காலித்திற்கு எதிராக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.