பட்ஜெட் குறித்து எதிர்கட்சி தலைவர்களும் பொருளாதார வல்லுநர்களும் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை கடுமையாக விமரிசித்துவந்தனர். நாட்டின் ஏழை மக்களை புறக்கணித்துவிட்டதாக சாடினர். இதையடுத்து, பிரதமர் மோடியை போலவே ராகுல் காந்தியை விமரிசித்து விமரிசனங்களுக்கு பதிலளித்துள்ளார் நிர்மலா சீதாராமன்.
கடந்த 2013ஆம் ஆண்டு, ஏழ்மை என்பது ஒரு மனநிலை என ராகுல் காந்தி பேசியதை மேற்கோள் காட்டி மாநிலங்களவையில் பதிலடி அளித்துள்ள மத்திய நிதியமைச்சர், "உங்கள் முன்னாள் தலைவர், 'வறுமை என்பது உணவு, பணம் அல்லது பொருள் பற்றாக்குறையைக் குறிக்காது. தன்னம்பிக்கை இருந்தால் அதை முறியடிக்க முடியும். மேலும், 'இது ஒரு மனநிலை' என்று கூறினார். நான் அந்த நபரின் பெயரைக் குறிப்பிடவில்லை, ஆனால் அவர் யார் என்று எங்களுக்குத் தெரியும்.
தயவு செய்து தெளிவாக இருங்கள். இந்த ஏழ்மைக்குதான் நான் தீர்வு காண வேண்டுமா? மனநிலையில் உள்ள ஏழ்மை" என கேள்வி எழுப்பினார்.
கடந்த 2014க்கு முன்பு, உலக பொருளாதார நெருக்கடி காலக்கட்டத்தில் நுகர்வோர் விலை குறியீட்டு எண் 9.1 சதவிகிதமாக இருந்ததாகக் கூறிய நிர்மலா சீதாராமன், தற்போது கரோனா காலத்தில் அது 6.2 சதவிகிதமாக உள்ளது என தெரிவித்தார். இதுகுறித்து விரிவாக பேசிய அவர், "இந்த சிறிய நெருக்கடியை கூட எதிர்கட்சி சரியாக கையாளவில்லை" என்றார்.
இதையும் படிக்க | மக்களிடையே பிளவை ஏற்படுத்த வேண்டாம்: சென்னை உயா்நீதிமன்றம்
சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகளானதை அமிரத காலம் என பெயரிட்டு மத்திய அரசு கொண்டாடிவருகிறது. 2014ஆம் ஆண்டுக்கு பிறகு அமிர்த காலம் அல்ல, ராகு காலம் என கபில் சிபல் விமரிசித்திருந்தார்.
இதற்கு பதிலடி அளித்துள்ள நிர்மலா சீதாராமன், "நாம் அதை அமிர்த காலம் என்று அழைப்பதில் ஆச்சரியமில்லை. 100 ஆண்டுகள் (சுதந்திரம்) நமக்கு தொலைநோக்கு பார்வை இல்லை என்றால், நாம் கஷ்டப்படுவோம். 65 ஆண்டுகள் காங்கிரஸ் ஆட்சி செய்த போது, ஒரு குடும்பத்திற்கு நன்மை பயத்ததை தவிர காங்கிரஸ் கட்சிக்கு எந்த பார்வையும் இல்லை" என்றார்.