அரசின் கோரிக்கையின்படியே சட்டப்பேரவை முடக்கப்பட்டுள்ளதாக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு மேற்கு வங்க மாநில ஆளுநர் ஜெகதீப் தன்கர் விளக்கம் அளித்துள்ளார்.
மேற்கு வங்க சட்டப்பேரவையை முடக்க ஆளுநருக்கு எந்தவித அதிகாரம் இல்லை என்று ஜக்தீப் தன்கரின் செயலைக் கண்டித்து மம்தா பானர்ஜிக்கு ஆதரவாக முதல்வர் மு.க.ஸ்டாலின் சுட்டுரையில் பதிவிட்டிருந்தார். அதற்கு விளக்கம் கொடுக்கும் வகையில் தன்கர் இந்த விளக்கத்தை அளித்துள்ளார்.
மேற்கு வங்க சட்டப்பேரவையை பிப்ரவரி 12 முதல் முடக்கி வைக்க ஆளுநர் ஜக்தீப் தன்கர் உத்தரவு பிறப்பித்துள்ளார். இதற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்திருந்தார்.
இது தொடர்பாக மு.க.ஸ்டாலின் சுட்டுரையில் பதிவிட்டிருந்ததாவது, மேற்கு வங்க சட்டமன்றத்தை ஆளுநர் முடக்கிய செயல், விதிமுறைகள் மற்றும் மரபுகளுக்கு எதிரானது. சட்டப்பேரவையை முடக்க ஆளுநருக்கு எந்தவித அதிகாரம் இல்லை. இது ஏற்கெனவே நிலைநிலைநிறுத்தப்பட்டுள்ள வழக்கத்திற்கு எதிரானது.
மாநில அரசின் தலைவராக கருதப்படுபடுபவர் அரசியலமைப்பை நிலைநாட்டுவதில் முன்மாதிரியாக திகழ வேண்டும். ஜனநாயகத்தின் அழகே ஒருவருக்கொருவர் மதிப்பு அளிப்பதுதான் என்று பதிவிட்டிருந்தார்.
இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில், ஆளுநர் ஜெகதீப் தன்கர் சுட்டுரையில் பதிவிட்டிருந்ததாவது, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினின் கடுமையான கருத்துகளில் உண்மை இல்லை. அரசின் கோரிக்கையை ஏற்றே சட்டப்பேரவை முடித்து வைக்கப்பட்டது என்று அவர் விளக்கம் கொடுத்துள்ளார்.