'பாஜகவும் காங்கிரஸும் மிகவும் கேவலமாக அரசியல் செய்கின்றன' - கேஜரிவால் குற்றச்சாட்டு
பிரதமரின் பாதுகாப்பு விவகாரத்தில் காங்கிரஸ் மற்றும் பாஜக ஆகிய இரு கட்சிகளும் 'கேவலமான அரசியலில்' ஈடுபடுவதாக ஆம் ஆத்மி கட்சித் தலைவர் அரவிந்த் கேஜரிவால் குற்றம் சாட்டினார்.
பஞ்சாப் மாநிலம் லூதியானாவில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய அவர், 'ஆம் ஆத்மி ஆட்சிக்கு வந்தால், பொதுப் பாதுகாப்பிற்கு நாங்கள் பொறுப்பேற்போம் என்று ஒவ்வொரு பஞ்சாபிக்கும் நான் இங்கு உறுதியளிக்க விரும்புகிறேன். தேசிய அல்லது உள் பாதுகாப்பு தொடர்பான எந்த அரசியலிலும் நாங்கள் ஈடுபடமாட்டோம்.
சன்யுக்த் சமாஜ் மோர்ச்சா கட்சியின் முதல்வர் வேட்பாளர் பல்பீர் ராஜேவால், ஆம் ஆத்மி கட்சி தேர்தலில் போட்டியிட டிக்கெட்டுகளை விற்றதாக குற்றம் சாட்டியுள்ளார். அதற்குரிய ஆதாரத்தை சமர்ப்பித்தால் அவர் கூறியதை நாங்கள் வரவேற்கிறோம். ஒருவேளை குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டால் கட்சி உடனடியாக இங்கிருந்து இடத்தைக் காலி செய்யும்' என்றார்.
மேலும், ஆம் ஆத்மி கட்சியின் அமிர்தசரஸ் கிழக்கு வேட்பாளர் ஜீவன்ஜோத் கௌரை ஆதரித்துப் பேசிய கேஜரிவால், காங்கிரஸின் நவ்ஜோத் சிங் சித்து மற்றும் சிரோமணி அகாலி தளம் கட்சியைச் சேர்ந்த பிக்ரம் சிங் மஜிதியா இருவரும் அந்தத் தொகுதியில் தோல்வியடைவார்கள் என்றும் தெரிவித்தார்.