உக்ரைனில் இருக்கும் 18,000 இந்தியர்களை மீட்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக வெளியுறவுத்துறை இணையமைச்சர் வி.முரளீதரன் தெரிவித்துள்ளார்.
உலக நாடுகள் இடம்பெற்றுள்ள நேட்டோ ராணுவ அமைப்பில் உக்ரைன் இணைவதற்கு எதிர்ப்பு தெரிவித்து வந்த ரஷியா, உக்ரைன் மீது போர்த்தாக்குதலை தொடங்கியுள்ளது. உக்ரைன் மீது ராணுவ நடவடிக்கைளை மேற்கொள்ள ரஷிய அதிபர் விளாதிமிர் புதின் வியாழக்கிழமை உத்தரவிட்டதை அடுத்து, ரஷியப் படைகள், உக்ரைனில் போர் தொடுக்கத் தொடங்கியுள்ளது. இதனால் அங்கு பதற்றமான சூழ்நிலை நிலவுகிறது.
ரஷியா - உக்ரைன் போர் குறித்து அமெரிக்கா, இந்தியா உள்ளிட்ட உலக நாடுகள் பல கவலை தெரிவித்துள்ளன. ஐ.நா.வும் போரை நிறுத்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளது.
இதற்கிடையே உக்ரைனின் வான் எல்லை மூடப்பட்டதால் இந்தியர்களை மீட்கச் சென்ற ஏர் இந்தியா விமானம் நடு வானிலேயே தில்லிக்கு மீண்டும் திரும்பியது.
இந்நிலையில், மத்திய இணையமைச்சர் முரளீதரன் தெரிவித்திருப்பதாவது:
உக்ரைனில் உள்ள மாணவர்கள் உள்பட 18 ஆயிரம் இந்தியர்களை திரும்ப அழைத்து வர மத்திய வெளியுறவுத்துறை நடவடிக்கை எடுத்து வருகின்றது. வான் எல்லைகள் மூடப்பட்டுள்ளதால், இந்தியர்களை மீட்பதற்கான மாற்று ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றோம்.
கேரளத்தை சேர்ந்த மாணவரிடம் தொலைப்பேசியில் பேசினேன். உக்ரைனின் தெற்கு பகுதிகளில் உள்ள மாணவர்களுக்கு உணவு, தண்ணீர் உள்ளிட்டவை கிடைப்பதாக தெரிவித்தனர். முன்னதாக ஈராக் போன்ற நாடுகளிலிருந்து இந்தியர்களை நமது அரசு மீட்டுள்ளது. ஆகையால், மாணவர்களும் பெற்றோர்களும் பயப்படத் தேவையில்லை. ”