உத்தரப் பிரதேச மாநிலத்தில் விரைவில் நடைபெற உள்ள சட்டபேரவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி தன் வேட்பாளர்களின் முதல்கட்ட பட்டியலை வெளியிட்டுள்ளது.
உத்தரப் பிரதேச மாநிலத்தில் வருகிற பிப்ரவரி 10 முதல் மார்ச் 10 ஆம் தேதி வரை 7 கட்டமாக சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இந்தியாவின் மிகப்பெரிய மாநிலத்தை யார் வெல்ல இருக்கிறார்கள் என பலரும் எதிர்பார்த்துக் கொண்டிருப்பதால் தேர்தல் களம் சூடு பிடிக்கத் தொடங்கியுள்ளது.
இந்நிலையில், காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி உத்தரப் பிரதேசத்தில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர்களில் முதல் 125 பேரின் பட்டியலை வெளியிட்டுள்ளார்.
இந்த வேட்பாளர்களில் 50 பேர் பெண்கள். மேலும், கடந்த 2017-ஆம் ஆண்டு உன்னாவ் பகுதியில் பாஜக எம்எல்ஏ குல்தீப் சிங் செனாரால் பாலியல் வன்கொடுமைக்குள்ளான பெண்ணின் தாய் ஆஷா சிங் காங்கிரஸ் வேட்பாளராக போட்டியிட இருக்கிறார்.
இதுகுறித்து பிரியங்கா காந்தி பேசியபோது, ‘உத்தரப் பிரதேச தேர்தலில் காங்கிரஸ் போட்டியிடும் தொகுதிகளில் 40 சதவீதம் பெண்களுக்கும் 40 சதவீதம் இளைஞர்களுக்கும் வாய்ப்பு தரப்பட இருக்கிறது’ எனத் தெரிவித்தார்.