கேரளம் கரோனா மூன்றாம் அலையை எதிர்கொண்டு வருவதால், அடுத்த மூன்று வாரங்கள் மிகவும் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் அந்த மாநில சுகாதாரத் துறை அமைச்சர் வீணா ஜார்ஜ் தெரிவித்துள்ளார்.
திருவனந்தபுரத்தில் இன்று (புதன்கிழமை) செய்தியாளர்களைச் சந்தித்த அவர் மேலும் கூறியதாவது:
"முதலிரண்டு கரோனா அலைகளுக்கு மாறாக மூன்றாம் அலையில், தொடக்கத்திலேயே நோய் தீவிரமாகப் பரவுகிறது. இரண்டாம் அளையில் பரவல் விகிதம் 2.68 சதவிகிதம். தற்போது 3.12 சதவிகிதம். எனவே, அடுத்த மூன்று வாரங்கள் கேரளத்துக்கு மிக முக்கியமானது.
இதன் தீவிரத்தன்மை குறைவாக இருந்தாலும், டெல்டா வகையைக் காட்டிலும் ஒமைக்ரான் வகை பரவல் 5 முதல் 6 மடங்கு கூடுதலாக உள்ளது. அதை எளிதாக எடுத்துக்கொள்ளக் கூடாது.
பெருந்தொற்றைக் கட்டுப்பாடிலேயே வைத்திருக்க அனைவரும் கரோனா வழிமுறைகளைக் கட்டாயம் பின்பற்ற வேண்டும். நோய்த் தொற்று மற்றும் தடுப்பூசி குறித்து சமூக ஊடகங்களில் பொய் பரப்புரைகளைப் பரப்புபவர்கள் மீது கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும்.
ஒமைக்ரான் வகை கரோனா, இயற்கை தடுப்பூசி என்பதால் ஆபத்தானதல்ல என சிலர் பரப்புகின்றனர். இதுபோன்ற பிரசாரங்கள் ஆதாரமற்றது. எந்தவொரு கரோனா வகையாக இருந்தாலும், அதன் அடிப்படை குணாதிசயங்கள் ஒன்றுதான்.
இரண்டாம் அலையில் அதிக பாதிப்புகளுக்குக் காரணம் டெல்டா வகை கரோனா. அது முற்றிலும் நிறைவடைவதற்குள் மூன்றாம் அலை தொடங்கிவிட்டது. தற்போது டெல்டா மற்றும் ஒமைக்ரான் என இரண்டு வகை கரோனாவும் பாதிப்புகளை அதிகரிக்கின்றன.
இரண்டாம் அலையைக் காட்டிலும் 5 சதவிகிதம் கூடுதல் பாதிப்பு எண்ணிக்கைகளை மூன்றாம் அலையில் எதிர்பார்க்கலாம்" என்றார் அமைச்சர்.