ஐந்து மாநிலங்களுக்கான தேர்தல் வரும் பிப்ரவரி 10ஆம் தேதி முதல் தொடங்கவுள்ளது. இதன் காரணமாக, அரசியல் கட்சிகள் தீவிரமான பரப்புரையில் ஈடுபட்டுவருகின்றன. குறிப்பாக, திரிணமூல் மேற்குவங்கத்தைத் தாண்டி தடம் பதிக்க வேண்டும் என்ற முனைப்பில் களமிறங்கியுள்ளது.
இதன் காரணமாக, மம்தாவின் திரிணாமுல் காங்கிரஸ் கோவாவில் முதல்முறையாக போட்டியிடுகிறது. கட்சியை பலப்படுத்தும் விதமாக மாநிலத்தின் மூத்த அரசியல் தலைவர்களை தங்கள் கட்சியில் இழுக்கவும் செய்துள்ளது. அதேபோல, ஒரு முனையில் காங்கிரஸை விமரிசிக்கும் அதே சமயத்தில் பாஜகவையும் தாக்கிவருகிறது.
இந்நிலையில், கோவாவில் செய்தியாளர்களிடம் பேசிய திரிணமூல் காங்கிரசின் துணைத் தலைவர் பவன் வர்மா, "மதத்தைப் பயன்படுத்தி கோவா மக்களைப் பிளவுபடுத்துவது என்பது கோவா மக்களை அவமதிக்கும் முயற்சி தான். நான் அனைவருக்கும் முக்கியமான ஒரு விஷயத்தைச் சொல்லிக் கொள்ள விரும்புகிறேன்.
அதாவது திரிணாமுல் காங்கிரஸ் கட்சி தான் உண்மையாக இந்து மதத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் ஒரு கட்சி. அதற்கு யாருக்கும் எவ்வித சந்தேகமும் வேண்டாம்.
அனைவரையும் உள்ளடக்கி, சகிப்புத்தன்மை, பன்மைத்துவம் ஆகியவற்றைக் கொண்டிருக்கும் ஒரே அரசியல் கட்சி உண்மையாகவே இந்து மதத்தைக் குறிக்கும் ஒரே அரசியல் கட்சி திரிணாமுல் காங்கிரஸ் தான்.
ஆனால், பாஜகவைப் பொறுத்தவரை அது இந்து மதத்தைச் சிதைக்கிறது. இந்து மதத்தை வெறுப்பைப் பரப்பவும் வன்முறையைத் தூண்டவுமே பாஜக பயன்படுத்துகிறது. நமது அரசியலமைப்பு சட்டம் உறுதி அளித்ததன்படி அனைத்து மதங்களையும் அவர்களின் நம்பிக்கையையும் மதிப்பளிக்கும் ஒரே கட்சி திரிணாமுல் தான்.
இதையும் படிக்க | டெல்டா கரோனாவை தடுத்து நிறுத்தும் ஒமைக்ரான்: ஆய்வில் புதிய தகவல்
நாங்கள் இந்து மதத்திற்காக நிற்கிறோம் என்று கூறும்போது, அது மத நல்லிணக்கம், அமைதி மற்றும் சமூக ஸ்திரத்தன்மை என அனைத்தும் உறுதி செய்யும் வகையிலேயே இருக்கும். மக்கள் பிரதிநிதிகள் அனைத்து தரப்பு மக்களின் நலனுக்கு உழைக்க வேண்டும் என்பது மம்தா பானர்ஜியின் கருத்து.
அனைத்து மதத்தினரும் வாக்களித்ததால்தான், மேற்கு வங்கத்தில் திரிணாமுல் காங்கிரஸின் வாக்கு சதவீதம் 44 சதவீதத்தில் இருந்து 49 சதவீதமாகக் கடந்த சட்டப்பேரவை தேர்தலில் உயர்ந்தது. நாங்கள் கொண்டு வரும் திட்டங்கள் அனைத்து மதத்தினருக்கும் பொதுவாகவே இருக்கும். ஏதோ அனைத்து அரசியல் கட்சிகளும் இந்துக்களுக்கு எதிராக இருப்பதைப் போலக் கூறி, இந்து மதத்தின் மீது தனக்கு ஏகபோகம் உரிமை காட்ட பாஜக முயல்கிறது" என்றார்.