மும்பையில் பெய்து வரும் கனமழையால் நகரின் பல்வேறு பகுதிகளில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களில் தென்மேற்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில், மும்பை மற்றும் புறநகர் பகுதிகளில் திங்கள்கிழமை முதல் தொடர் கனமழை பெய்து வருகின்றது.
தொடர் கனமழையால் நகரின் முக்கிய சாலைகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. இதனால், பேருந்து, ரயில் சேவைகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.
இந்திய வானிலை மையம் அளித்துள்ள தகவலின்படி, வெள்ளிக்கிழமை வரை கனமழை தொடரும் என்பதால் மக்கள் தேவையின்றி வெளியே வருவதை தவிர்க்குமாறு தெரிவித்துள்ளனர்.
நீர்நிலைகளில் நீரின் அளவு தொடர்ந்து அதிகரித்து வருவதால் கரையோர மக்களை பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றக் கோரி அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
முன்னதாக, செவ்வாய்க்கிழமை மாலை மும்பை மாநகராட்சி பேரிடர் கட்டுப்பாட்டு அறையில் ஆய்வு மேற்கொண்ட மகாராஷ்டிர முதல்வர் ஏக்நாத் சிண்டே, உயிரிழப்புகளை தவிர்க்க நிலச்சரிவு ஏற்படும் அபாயம் உள்ள இடங்களில் வசிக்கும் மக்களை உடனடியாக பாதுகாப்பான இடங்களுக்கு மாற்ற அறிவுறுத்தினார்.
மேலும், மாநிலம் முழுவதும் தேசிய பேரிடர் மீட்புப் படையினர் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்திருந்தார்.