கர்நாடகத்தின் குடகு,தக்ஷின கன்னடா, உடுப்பி மற்றும் உத்தர கன்னடா பகுதிகளில் கனமழை பெய்யக்கூடும் என இந்திய வானிலை மையம் எச்சரித்துள்ள நிலையில், மாநிலத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை முதல்வர் பசவராஜ் பொம்மை தீவிரப்படுத்தியுள்ளார்.
இது குறித்து அவர் கூறியிருப்பதாவது: “இந்திய வானிலை மையத்தின் கணிப்புப் படி கர்நாடகத்தின் குடகு,தக்ஷின கன்னடா, உடுப்பி மற்றும் உத்தர கன்னடா பகுதிகளில் கனமழை பெய்யக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அனைத்து துணை ஆணையர்களுடன் பேசியுள்ளேன். அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளன. தேசிய மற்றும் மாநில பேரிடர் மீட்புக் குழுவினர் தயார் நிலையில் உள்ளனர். தாழ்வானப் பகுதிகளில் வசிக்கும் மக்கள் அங்கிருந்து அப்புறப்படுத்தப்பட்டு பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இந்திய வானிலை மையத்தினால் சிவப்பு எச்சரிக்கை (red alert) விடுக்கப்பட்டுள்ளதால் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு இன்று (ஜூலை 7) விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. மீனவர்கள் யாரும் கடலுக்குள் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டிருக்கிறார்கள். அதேபோல பொதுமக்களும் கடற்கரைக்குச் செல்ல வேண்டாம் எனக் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.” என்றார்.
முன்னதாக, நேற்று (ஜூலை 6) கர்நாடகத்தின் தக்ஷின கன்னடா மாவட்டத்தின் பஞ்ஜிகல் கிராமத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் ஒருவர் பலியானார். மேலும், 3 பேர் மீட்கப்பட்டு ஆபத்தான முறையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுவரை கனமழைக்கு பலியானோரின் எண்ணிக்கை 3 ஆக உயர்ந்துள்ளது.